இதோ கப்பல் வந்துருச்சு பாருங்க! மீண்டும் பெட்ரோல் - இலங்கை மக்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி
கொழும்பு: பொருளாதார சீரழிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் திங்கட்கிழமை பெட்ரோல் விநியோகம் மீண்டும் சீரான நிலைக்கு திரும்பும் என அந்நாட்டின் பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனம் தெரிவித்து இருக்கிறது.
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. தற்போது இது அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுத்து இருக்கிறது.
உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

எல்லாமே தட்டுப்பாடு
இலங்கையில் பொருளாதார சூழல் மோசமடைந்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. உணவு மற்றும் எரிபொருட்கள் கிடைக்கவில்லை. பொருளாதார மந்தநிலையால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமானோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் காலி
பெட்ரோல் பங்குகளில் எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்தும் முடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

வலுக்கும் போராட்டங்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. கடந்த சில 10 ஆண்டுகளில், தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள், தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எரிந்துவிட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி இருக்கின்றனர்.

பல துறையினர் போராட்டம்
இலங்கை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்று கூறி அரசு மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசுக்கு எதிராகவும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மார்வன் அட்டபட்டு, சனந்த் ஜெயசூரியா உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதுதொடர்பாக இலங்கை முன்னாள் கேப்டன் அஜந்தா மேத்தியூஸ், சங்ககரா உள்ளிட்டோரும் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்தனர்.
Recommended Video

இயல்பு நிலைக்கு திரும்பும் பெட்ரோல் விநியோகம்
இதனிடையே இலங்கையில் பெட்ரோல் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என இலங்கை பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 37,500 மெட்ரிக் டன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று வந்தடைந்து இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 41,000 மெட்ரிக் டன் டீசலை ஏற்றிச்செல்லும் ஒரு கப்பலும் வந்துள்ளதால் அவற்றை இறக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications