நெருக்கடியான காலத்தில் உயிர் மூச்சு கொடுத்த இந்தியாவுக்கு நன்றி... இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில்
கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட காலத்தில் உயிர் மூச்சு கொடுக்கும் வகையில் உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே இன்று பேசியதாவது: இலங்கை நெருக்கடியான நிலையை எதிர்கொண்ட தருணத்தில் இந்தியாவின் உதவி மிகப் பெரியது. இந்தியாவானது இலங்கைக்கு உயிர் மூச்சு வழங்கியது. இந்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் இலங்கையர்தான்.. நான் எம்.பிக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருந்தாலும் இலங்கையர்தான். இலங்கை இதுவரை எதிர்கொள்ளாத பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வு காண அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுதல் அவசியம்.
இலங்கையின் அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம். இலங்கையில் அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்த விவாதங்களை தொடங்கி வைக்கிறோம். அனைவரும் இணைந்து பங்கேற்கக் கூடிய ஒரு அரசாங்கத்தின் மூலம் நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்ல முடியும். ஆகையால்தான் அனைத்து கட்சி அரசாங்கம் அவசியமானதாக கருதப்படுகிறது.
இன்று மக்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்படும். மக்களின் முன் உள்ள எரிபொருட்கள் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை நிலைத்ததாக உருவெடுக்க செய்ய வேண்டும். இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு கிடைக்க உள்ளது. இலங்கை மீண்டும் அரிசி ஏற்றுமதி நாடாக உருவாகும். இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வருவார்கள். நமது தேசத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர்களின் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும். இதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஊழலை ஒழிக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது நாட்டுக்காக ஆற்றும் கடமை. அதனால்தான் சவாலை ஏற்றேன். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.












Click it and Unblock the Notifications