தப்பி ஓட தயாராகும் ராஜபக்ச.. ஒரு பிரதமருக்கு இது அழகல்ல!
கொழும்பு: இலங்கையில் நிலவும் கடும் பதற்றமான சூழலில், பிரதமர் ராஜபக்ச, வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2009 போர் காலத்தில், எங்கும் தப்பிச் செல்லாமல் களத்தில் நின்ற பிரபாகரனோடு, ராஜபக்சவை ஒப்பிட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் சிங்களர்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்ட ராஜபக்சவுக்கு தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பற்றி எரியும் இலங்கை.. அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்ச
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. பொருளாதார சீர்கேட்டை அடுத்து அதிபர் மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலகக் கோரி, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்திற்கு வெளியே இலங்கை அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது அவருடைய ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
வன்முறை
இதைத்தொடர்ந்து கொழும்புவில் வெடித்த வன்முறையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதையடுத்து இலங்கையில், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில், ஆளுங்கட்சி எம்.பி., மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பலியாகினர். பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள், ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் என பலரது வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
ராஜினாமா
தான் சார்ந்திருந்த கட்சியினரே ராஜினாமா செய்யச் சொல்லியும், மறுத்து வந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிலைமை கைமீறியதைத் தொடர்ந்து நேற்று இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து, மஹிந்த ராஜபக்சே தான் வசித்து வந்த கொழும்பு பிரதமர் மாளிகையிலிருந்தும், பாரம்பரியமிக்க அலரி மாளிகையை விட்டும் வெளியேறினார்.
வெளிநாட்டுக்கு தப்பிக்க
இலங்கை மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிந்த ராஜபக்ச, மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதி தோட்டா வரை:
இலங்கை ராணுவத்துடனான யுத்தத்தில் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, இறுதி வரை போராடிய பிரபாகரனை மதிக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார். எல்லா நாடுகளிலும் தனக்கு ஆதரவாளர்களைக் கொண்டிருந்தும் பிரபாகரன், போரை நிறுத்திவிட்டுச் சரணடையவும், போர் நடைபெறும் சூழலிலேயே வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் முயலவில்லை என்பதையே பொன்சேகா சுட்டிக்காட்டி இருந்தார்.
Recommended Video
ராஜபக்சே ஹீரோவா:
இலங்கை யுத்த காலத்தில் மகிந்த ராஜபக்சே சிங்களர்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். ஆனால் அவரது வீட்டை இன்று சிங்களர்களே அடித்து நொறுக்கி தீ வைத்திருக்கிறார்கள். அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டுக்கு ரகசியமாகத் தப்பிச் செல்ல இருக்கிறார். இதை பிரபாகரனுடன் ஒப்பிட்டு இலங்கை தமிழர்கள் பலரும் சமூக வளைத் தளங்களில் விமர்சித்து வருகின்றனர்