"அப்போது விடுதலை புலிகளை முடித்தோம்! இப்போது பொருளாதார பிரச்னையை முடிப்போம்!" மகிந்த ராஜபக்ச பரபர
கொழும்பு: இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராசபக்ச மக்களிடையே பேசினார்.
குட்டி தீவு நாடான இலங்கை பெரும்பாலும் சுற்றுலாத் துறையையே நம்பி இருந்த ஒரு நாடாகும். கொரோனா காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறை, இன்னும் கூட முழுமையாக மீளவில்லை.
இதன் காரணமாக இலங்கை மிக மோசமான பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இத்துடன் கடந்த காலங்களில் வாங்கிய கடனுக்கான வட்டியும் சேர, இலங்கை மீளவே முடியாத பொருளாதார நிதி நெருக்கடியை இப்போது சந்தித்து உள்ளது.

இலங்கை
இந்த ஆண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு மைனஸ் 16.3 சதவீதம் என்ற அளவுக்கு மிக மோசமாகச் சரிந்துள்ளது. மேலும், அந்நியச் செலாவணி குறைந்துள்ளதால், இலங்கை ரூபாயின் மதிப்பும் கடுமையாகச் சரிந்துள்ளது. தற்போது அமெரிக்கா டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 290 இலங்கை ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கூட இதில் இருந்து தப்பவில்லை.

மக்கள் போராட்டம்
இதனால் இலங்கை நாட்டில் அத்தியாவசிய பணிகளும் கூட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இரவு பகல் பாராத அங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

24 மணி நேரமும்
இந்நிலையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாட்டில் இப்போது இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் நிலைமையைச் சமாளிக்க அரசு 24 மணிநேரமும் உழைத்து வருகிறது என்றும் தெரிவித்தார். மக்கள் போராட்டம் தொடங்கிய பின்னர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களிடையே பேசுவது இதுவே முதல்முறையாகும்.

விடுதலைப் புலிகள் போர்
பிரதமர் மகிந்த ராஜபக்ச பேசுகையில், "மக்களின் துன்பங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம், நாங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 30 ஆண்டுக்கால போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வந்தோமோ அதேபோல நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையையும் முடிவுக்குக் கொண்டு வருவோம்" என்று 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைக் குறிப்பிட்டுப் பேசினார்.

ராஜினாமா
இலங்கையில் உள்ள அனைத்து 225 எம்பிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் வலியுறுத்தி வரும் நிலையில், "நாடாளுமன்றத்தை நிராகரிப்பது ஆபத்தானது" என்று அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையில் இப்போது நடக்கும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவே காரணம் என்றும் அவர் சாடினார்.

அனைத்து கட்சி கூட்டம்
அனைத்து கட்சிகளையும் கொண்ட அரசை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்து இருந்த நிலையில், இது தொடர்பாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 கட்சிகளைச் சேர்ந்த 42 எம்பிகள் உடன் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி இருந்தார், இருப்பினும், தற்போது இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன,












Click it and Unblock the Notifications