2வது முறை உயர்வு.. இலங்கையில் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு! குழந்தைகள், முதியவர்கள் சிரமம்!
கொழும்பு: இலங்கையில் 60 மருந்து பொருட்களின் விலைகள் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 6 வாரத்துக்கு முன்பு 30 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் 2வது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினம் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
இலங்கை தேயிலை, ஆடை, சுற்றுலா வருமானங்களை தான் பிரதானமாக நம்பியுள்ளது. கொரோனா காலத்தில் வருமானம் முடங்கிய நிலையில் கடன் அதிகரித்தது.
இதனால் அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது. பிற நாட்டுக்கு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு பலமடங்கு அதிகரித்தது. இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது.

மக்கள் போராட்டம்
இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டுள்ளன. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதோடு, மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்பு உள்பட பல நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே முயற்சித்து வருகிறார். இருப்பினும் அது அவ்வளவு எளிதல்ல என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

கடன் கட்ட முடியாமல் தவிப்பு
மேலும் அந்நிய செலாணவணி கையிருப்பை தக்க வைக்க வேண்டி வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய 51 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலன கரடன் தொகை, அதற்கான வட்டி கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கையின் பணவீக்கம் தொடரந்து அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கை தனது பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் சர்வதேச நாணய நிதியத்தை அணுகியுள்ளது. இந்த நிதியம் உதவி செய்வதாக அறிவித்தாலும் அது உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை.

40 சதவீதம் அதிகரித்த மருந்து விலை
இந்நிலையில் தான் இலங்கையில் மருந்து பொருட்களின் விலைகள் திடீரென்று உயர்ந்துள்ளன. மருந்துகளின் விலையானது 40 சதவீதம் வரை எகிறியுள்ளது. ஏற்கனவே உணவு, பெட்ரோல், டீசல் உள்பட அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மருந்து விலை ஏற்றம் என்பது மக்களை இன்னும் சிரமத்தில் தள்ளும். மேலும் ஏற்கனவே பணப்பிரச்சனையில் இருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வானது இன்னும் கூடுதல் பிரச்சனையாக அமையும்.

60 மருந்துகளுக்கு அமலாகும்
இந்த விலை உயர்வானது மொத்தம் 60 வகையான மருந்துகளுக்கு பொருந்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நோய்எதிர்ப்பு சக்திக்கான ஆன்ட்பாடி, வலி நிவாரணிகள்(பெயின் கில்லர்), இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்கனவே அறுவை சிகிச்சைகள் கைவிடப்பட்டுள்ள நிலையில் மருந்து பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

6 வாரத்தில் 2வது முறை உயர்வு
இலங்கையில் கடந்த ஆறு வாரங்களில் இரண்டாவது முறையாக மருந்துப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் மத்தியில் 30 சதவீதத்துக்கு மருந்துகளின் விலை உயர்வு செய்யப்பட்டது. தற்போது 2வது முறையாக 40 சதவீதம் விலை உயர்வு அமலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications