உதவும் இந்தியா.. ஒதுங்கும் சீனா.. இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் நடப்பது என்ன? பின்னணி
கொழும்பு: கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்து வருகிறது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால் மக்கள் எதுவும் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.
ஒரு தரப்பினர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும் வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர்.
உல்லாச வீடியோவை காட்டி.. 6 மாதங்களாக 22 வயது பெண் பலாத்காரம்.. திமுக நிர்வாகிகள் உள்பட 8 பேர் கைது
மற்றொரு தரப்பினர் இனி இலங்கையில் நம்மால் வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து தமிழ்நாட்டுக்கு கடல்வழியாக அகதிகளாக தப்பி வருகின்றனர்.
உலகை உலுக்கும் காட்சிகள்
இலங்கை தலைநகர் கொழும்புவில் உணவுப் பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கம்பியில் பிரெட், ரொட்டித் துண்டுகளை குத்தியபடி ஆவேசமாக நிற்கும் படம் உலகம் முழுவதும் பரவி இலங்கையின் தற்போதைய சூழலை பட்டவர்த்தனமாக காட்டியது. அதேபோல் அண்மையில் இலங்கையிலிருந்து தமிழ்நாடுக்கு கடல் வழியாக 4 மாத குழந்தையுடன் வாழ வழியின்றி தப்பி வந்த பெற்றோரின் காட்சிகளும் வெளியாகி காண்போரை கலங்க வைத்துள்ளன.
என்ன நடக்கிறது இலங்கையில்?
கணிக்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது இலங்கை. இதனால் உணவு பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. தட்டுப்பாடு காரணமாக விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்று இருக்கிறது. பலர் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். உணவு மட்டுமின்றி எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. பல மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. காகிதங்கள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் கூட ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
தமிழ்நாட்டுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை உயர வாய்ப்பு
இலங்கையில் நாளுக்கு நாள் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பதற்றம் அதிகரித்து வருகிறது. நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களின் சேமிப்பும் நாளாக நாளாக கரைந்து வருகின்றன. இதனால் தற்போது தமிழ்நாட்டுக்கு வரும் அகதிகளை காட்டிலும் இனி வரும் காலங்களில் இலங்கை அகதிகள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என புலனாய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுவது அந்நிய செலாவணி வீழ்ச்சி. அரசின் கையிருப்பில் இருந்த வெளிநாட்டு பணம் குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்து இலங்கையால் எதையும் இறக்குமதி செய்ய முடியவில்லை. முக்கிய பொருட்களான சர்க்கரை, பருப்பு, பெட்ரோல், காகிதம், மருந்துகள், சிமெண்ட் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து இலங்கை இறக்குமதி செய்து வருகிறது. இவற்றை இறக்குமதி செய்திட முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்திருக்கிறது.
வீதிகளில் நடமாடும் ராணுவ வீரர்கள்
இலங்கை பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்து வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக காரணமாக பெட்ரோல் நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டு வருகின்றன. அரசு பதவி விலக வேண்டும் என்ற முழக்கங்களும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி செய்வதறியாமல் தவித்து வரும் இலங்கை அரசுக்கு இது கூடுதல் சவாலாக உள்ளது.
10 பில்லியன் டாலர் பற்றாக்குறை
கடந்த வாரம் இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து பேசிய அந்நாட்டின் அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே, இலங்கையின் வர்த்தக பற்றாக்குறை 10 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது என்றார். இதற்கு முக்கிய காரணம், முந்தைய ஆண்டுகளை விட கடந்த ஆண்டு அந்நிய பொருட்களை அதிகளவில் இலங்கை இறக்குமதி செய்ததே. ஆனால், இலங்கை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு மிகக்குறைவு. இதுதான், இலங்கையிடம் வெளிநாட்டு நாணயம் குறைவதற்கு முக்கிய காரணம்.
அடுத்தடுத்த துயரங்கள்
சுற்றுலாவுக்கு பெயர்போன நாடான இலங்கையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தேவாலயங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கடுமையாக குறைந்தது. இதனால் சுற்றுலா துறையும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அது மேல் எழுந்து வரும் நேரத்தில் கொரோனா வைரஸ் பரவியது. இதனால் விழுந்த இலங்கையின் சுற்றுலா மற்றும் இதர துறைகள் மீண்டும் வலுப்பெறவில்லை.
குறைந்த அந்நிய நேரடி முதலீடு
இந்த அடுத்தடுத்த துயரங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளால் அந்நிய நேரடி முதலீடும் கணிசமான அளவில் சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய நேரடி முதலீடுகளாக கிடைத்துள்ளன. இது அடுத்த 2019 ஆம் ஆண்டு 793 மில்லியன் அமெரிக்க டாலராக சரிந்தது. 2020 ஆம் ஆண்டு இலங்கைக்கு வெறும் 540 மில்லியன் டாலர்கள் மட்டுமே அந்நிய நேரடி முதலீடாக கிடைத்துள்ளன.
இலங்கைக்கு இந்தியா செய்த உதவி
கடந்த மார்ச் 17 ஆம் தேதி இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை மருந்துகள், உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சரக்குகள் வாங்க இந்தியா கடனாக கொடுத்து இருக்கிறது. கடந்த மாதம் 500 மில்லியன் டாலரை பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா இலங்கைக்கு கடனாக வழங்கி உதவியது.
சீனாவால் வந்த பிரச்சனை
இந்தியா இத்தனை உதவிகளை வழங்கி இருக்கும் அதே நேரம், இலங்கையின் நெருங்கிய நட்பு நாடான சீனா பெரியளவில் தோள் கொடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைக்கு சீனாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. சீனாவிடம் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாக இலங்கை உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக பெற்ற 5 லட்சம் பில்லியன் டாலர் கடன் தற்போது அதன் தலைமேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது.
கடனில் மூழ்கிய இலங்கை அரசு
எதிர்கால திட்டமிடல் இன்றி கடன் வாங்கி குவித்ததன் விளைவை தற்போது இலங்கை அனுபவித்து வருகிறது. இலங்கை இத்தகைய கடன் சுமையில் சிக்கித் தவிக்க முக்கிய காரணம் சீனா இலங்கையில் கொண்டு வந்த துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள்தான். குறிப்பாக ஹம்பந்தோட்டாவில் சீனா அமைக்கும் துறைமுகத்துக்கு அப்போதே எதிர்ப்புகள் எழுந்தன. இலங்கை சீன காலனி ஆதிக்கத்திற்குள் சென்று விடுமோ என்ற அச்சக்குரல்கள் ஆங்காங்கே ஒலித்தன. ஆனால் அதை அப்போது செவிசாய்க்காமல் ஒடுக்கிய இலங்கை அரசு இப்போது அதன் விளைவை அறுவடை செய்திருக்கிறது.