இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மின் தட்டுப்பாட்டை சீரமைக்க அதிகளவில் மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்த அந்நாட்டு அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.
இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஆட்டோ கட்டணம் 1 கி.மீ.க்கு ரூ.100
பொருளாதார கொள்கை
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.
வன்முறை
இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் ராஜபக்ஷேவின் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொதித்து எழுந்த இலங்கை மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின.
மகிந்த ராஜினாமா
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவாகினார். பொதுமக்கள் ராஜபக்ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லரைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். மேலும் அவரது கட்சி அமைச்சர்களின் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களின் எழுச்சியால் தப்பிச்சென்ற மகிந்த ராஜபக்ஷே இலங்கை திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கினார்.
ரணில் விக்ரமசிங்கே
இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக பதவியேற்குமாறு அழைப்பு விடுத்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே. பல்வேறு நிபந்தனைகளுடன் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்று இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியையும், வன்முறை சம்பவங்களையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையி நிதித்துறை அமைச்சர் பொறுப்பையும் ஆவர் ஏற்றுக்கொண்டார்.
மின் கட்டணத்தை உயர்த்த முடிவு
இந்த நிலையில் இலங்கையில் அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்படும் இலங்கையின் ஆற்றல் துறை அமைச்சர் கஞ்சனா விஜெசேகரா தெரிவித்துள்ளார். புதுப்பிக்கக்கூடிய ஆற்றைலை உருவாக்கும் திட்டம் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் கூறினார். தொழிற்சாலைகள், அரசு, தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், உணவகங்களின் கூரைகளை சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்தும் வகையில் அமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.