சாவு பயத்தை காட்டுறாங்க-ராஜபக்சே பூர்வீக வீடு தீக்கிரை-ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள் பற்றி எரிகின்றன
கொழும்பு: இலங்கையில் தென்பகுதியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள், வாகனங்கள் தொடர்ந்து சிங்களரால் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீட்டையும் போராட்டகாரர்கள் தீ வைத்து எரித்தனர்.இதனால் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உயிராபத்து அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
இலங்கை கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஒரு மாதமாக அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த அமைதிப் போராட்டத்தை ஒடுக்க பதவி விலகும் முன்பாக மகிந்த ராஜபக்சே வன்முறை குண்டர்களை களமிறக்கினார். ஆனால் இந்த குண்டர்களை பொதுமக்கள் திருப்பி அடித்து துரத்தி அடித்தனர்.
அத்துடன் கொழும்பு காலிமுகத்திடல் வன்முறை இலங்கையில் சிங்களரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பதவி விலகிய முன்னாள் பிரதமர் ராஜபக்சே ஆதரவு அரசியல்வாதிகளை சிங்களரே தேடி தேடி தாக்குகின்றனர். ராஜபக்சே ஆதரவாளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.

சாந்த பண்டார வீட்டுக்கு தீ வைப்பு
இலங்கையின் சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல், நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சரான சாந்த பண்டாரவின் வீட்டுக்கு இன்று பொதுமக்கள் தீ வைத்து உள்ளனர். இதற்கு முன்னதாக சமல் ராஜபக்சவின் மகன் சசீந்திர ராஜபக்ச இந்த பதவிகளை வகித்து வந்தார். முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் அலுவலகம் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஜோன்ஸ்டன் வீடு தீக்கிரை
பொதுஜன பெரமுனவின் எம்.பி.யும் மகிந்தவின் தீவிர ஆதரவாளருமான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு குருநாகலில் தாக்குதலுக்குள்ளானது. முன்னாள் அமைச்சர் நிமல் லான்சாவின் நீர்கொழும்பில் உள்ள வீடு தாக்கப்பட்டு பலத்த சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத்தின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நிட்டம்புவ, கடவத்தை மற்றும் மினுவாங்கோவில் பேரூந்துகள் மற்றும் சொகுசு கார்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளன.புலத்சிங்கள பிரதேச சபை தவிசாளரும் மொறட்டுவ நகர சபை மேயருமான சமன்லாலின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது.
|
ராஜபக்சே நினைவு சின்னம்
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் உல்லாசப் பயணத்துறையின் முன்னாள் அமைச்சரான பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்கும் ஒரு குழுவினர் தீ வைத்து எரித்தனர். இதனிடையே பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகைக்குள் நுழைய முயன்ற ஒரு குழுவினர் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. வீரகெட்டிய, மெதமுல சந்தியில் உள்ள டி.ஏ. ராஜபக்ச மற்றும் திருமதி தண்டின ராஜபக்ச ஆகியோரின் நினைவுச் சின்னங்களை ஒரு குழுவினர் இடித்து உள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.நீர்கொழும்பு Avenra Gardens ஹோட்டலில் தீப்பிடித்து உள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
|
ராஜபக்சே பூர்வீக வீட்டுக்கு தீ வைப்பு
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இலங்கை முழுவதும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் உயிர் பயத்துடன் பதுங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீட்டையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். நிதி அமைச்சராக இருந்த அலி சப்ரியின் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.
ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் பந்துல குணவர்தன, சன்ன ஜயசுமன, கோகிலா குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பியின் வர்த்தக நிலையம் தீக்கிரையானது. வடமத்திய மாகாண முதல்வர் மஹிபால ஹேரத், அவரது மகன் அமைச்சர் கனக ஹேரத் வீடுகளும் தீக்கிரையாகின.












Click it and Unblock the Notifications