அதிகாலையில் பதற வைத்த கோர சம்பவம்.. தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மோதி உரிமையாளர், 100 ஆடுகள் பலி!
கடலூர் : கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மோதியதில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற உரிமையாளர் லட்சுமணன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 100-க்கும் மேற்பட்ட ஆடுகளும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளன. அரசுப் பேருந்து மோதியதில் ஆடுகளின் உரிமையாளரும், வரிசையாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மற்றும் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், நெடுஞ்சாலையில் ஆடுகள் சிதறிக் கிடந்த காட்சி காண்போரின் நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்துள்ளது.

ஆடு மேய்ப்பவர்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கடந்த இருபது ஆண்டுகளாக கடலூர், கள்ளக்குறிச்சி , உளுந்தூர்பேட்டை பகுதிகளில் செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். அந்தவகையில், சமீப சில நாட்களாக கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆடுகளை மேய்த்து வந்துள்ளார்.

100 ஆடுகள் பலி
இந்நிலையில் இன்று அதிகாலையில் எலவசனூர் கோட்டையில் இருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னூறுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது லட்சுமணன் தனது இருசக்கர வாகனத்தில் ஆடுகளின் பின்னால் வந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் வேப்பூர் நோக்கி வரும்போது சேப்பாக்கம் மணிமுத்தாறு பாலம் அருகே பின்னால் வந்த செங்கலப்பட்டு பணிமனைக்கு சொந்தமான அரசுப் பேருந்து திருச்சி நோக்கி சென்ற போது ஆடுகள் மீது மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் தேசிய நெடுஞ்சாலையில் உடல் சிதறி உயிரிழந்தன.

உரிமையாளரும் உயிரிழப்பு
ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்த லட்சுமணன் மீதும் பேருந்து மோதியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆடுகளின் மீது மோதிய அரசுப் பேருந்தின் பின்னால் வந்த அதே பணிமனையைச் சேர்ந்த மற்றொரு பேருந்து மற்றும் தனியார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிஷ்ட வசமாக சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

வரிசையாக செத்துக் கிடந்த ஆடுகள்
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் வரிசையாக சிதறிக் கிடந்த செம்மறி ஆடுகளை சாலையோரம் அப்புறப்படுத்தினர். சாலை நெடுக ஆடுகள் செத்துக்கிடந்த காட்சி பதைபதைக்க வைத்துள்ளது. இச்சம்பவத்தால் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications