கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கடலூர்: கடலூரில் உள்ள பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பரவலாகப் பல இடங்களில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பல ஆலைகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் ஆலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்படுவதில்லை. இதனால் இதுபோன்ற ஆலைகளில் வெடி விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.

அதுபோன்ற ஒரு விபத்து தான் இப்போது கடலூர் எம். புதூர் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியில் சிறிய அளவிலான நாட்டு வெடி மற்றும் வானவெடி தயார் செய்யும் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது.
இதில் இன்று 7 பேர் பணிக்குச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் வழக்கம் போல வான வெடிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாகப் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிச் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தின் ஓடி வந்து உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
இருப்பினும், இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இருவர் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்,

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பாதிரிப்புலியூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வெடி விபத்தில் உயிரிழந்தோருக்குத் தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இதில் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications