முந்திரி தொழிற்சாலை ஊழியர் மர்ம மரணம்.. திமுக எம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி.. பாமக போராட்டம்
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோவிந்தராஜ் என்ற நபர் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராடி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ். இவர் பாமக கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அங்கு உள்ள கடலூர் திமுக எம்பி டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான டிஆர்வி முந்திரி ஆலையில் இவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் வேலைக்கு சென்ற இவர் இரவு முழுக்க வீடும் திரும்பவில்லை. அங்கு கடந்த 6 வருடமாக வேலை செய்து வந்த கோவிந்தராஜ் 8 மணிக்கு முன்பாக வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் அன்று இரவு நெடு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

மரணம்
இந்த நிலையில் நேற்று அதிகாலை, கோவிந்தராஜ் மகன் செந்தில் வேலுக்கு, கோவிந்தராஜ் மரணம் குறித்த செய்தி சென்றுள்ளது. திமுக எம்பி டிஆர்வி ரமேஷின் உதவியாளர் தன்னிடம் இந்த மரண செய்தி குறித்து தெரிவித்ததாக செந்தில் வேல் குறிப்பிட்டுள்ளார். அதில், உங்கள் அப்பா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை பண்ருட்டி மருத்துவமனையில் வைத்து இருக்கிறோம் என்று தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காயம்
இந்த நிலையில் தனது அப்பா கோவிந்தராஜனின் மரணம் குறித்து செந்தில்வேல் சந்தேகம் எழுப்பி உள்ளார். தனது அப்பாவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும். அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவர் தற்கொலை செய்ய முகாந்திரம் இல்லை. அவர் திடமான மனிதர். அவரை அடித்து கொலை செய்துள்ளனர் என்று செந்தில் வேல் குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதோடு இந்த முந்திரி ஆலைக்கு சொந்தமான திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் மற்றும் ஆலை ஊழியர்கள் மீது அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

புகார்
இந்த நிலையில் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் கோவிந்தராஜின் குடும்பத்தினர் திமுக எம்பி டிஆர்வி ரமேஷுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். பாமகவை சேர்ந்தவர் என்பதால் ஏற்பட்ட தகராறு காரணமாக கோவிந்தராஜ் கொல்லப்பட்டு இருப்பதாக போலீசாரிடம் இவர்கள் புகார் அளித்துள்ளனர். அதோடு இவரின் மரணம் குறித்து எங்களிடம் மிகவும் தாமதமாக தெரிவிக்கப்பட்டது. முன்பே தெரிவிக்கவில்லை.

விஷம்
அவர் விஷம் குடித்திருக்க வாய்ப்பே இல்லை . வேறு எதோ நடந்து இருக்கிறது. உடனே இதை போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோவிந்தராஜின் உறவினர்கள் போலீசாரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். இது அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமகவினர் இந்த மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

போராட்டம்
இதனால் மேல்மாம்பட்டு கிராமத்தில் பாமகவினர் கடும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். திமுக எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் இதில் உடனடியாக விசாரிக்க வேண்டும். உடலை மீண்டும் முறையாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications