அதிமுக ஆட்சியில் ரூ.7.. திமுக ஆட்சியில் ரூ.14.. "டபுளாகிடுச்சி.." கடுமையாக கொந்தளிக்கும் சீமான்!
கடலூர்: அதிமுக ஆட்சியில் 7 ரூபாய் கமிஷன் வாங்கினால், திமுக ஆட்சியில் 14 ரூபாய் கமிஷன் வாங்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 80 சதவிகிதம் வரை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், மக்களுக்கான உரிமையை தமிழக அரசு போராடி பெற்று கொடுக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக மற்றும் பாஜகவை தீவிரமாக விமர்சித்து வருகின்றார். குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்ததை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், என்எல்சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. மாற்று இடம் கொடுக்கவில்லை. வட மாநிலத்தவர்களுக்கு மட்டும் வேலை கொடுக்கப்படுகிறது.
விளைநிலத்தை அழித்து சாலை போட்டுவிட்டு தனியாக பட்ஜெட் போட்டு என்ன பயன்? சீமான் ஆவேசம்
மத்திய அரசு பணி
தமிழக அரசு மக்களுக்கான அரசாக இருந்து உரிமையை பெற்றுத்தர வேண்டும். இனி மேல் நிலத்தை கையகப்படுத்தினால் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். கடுமையாக எதிர்ப்போம், போராடுவோம். தமிழர்களுக்கு 90 சதவிகிதம் வேலைவாய்ப்பு கேட்டோம். ஆனால் 80 சதவிகிதம் வேலை வாய்ப்பையாவது தரவேண்டும். ரயில்வே, என்எல்சி ஆகியவை தமிழகத்தில் இருக்கும்போது தமிழர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால் அனைத்து பணிகளையும் வடமாநிலத்தவர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது என்று தெரிவித்தார்.
கரும்பு விவசாயிகள்
தொடர்ந்து, கரும்பு விவசாயிகள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு, விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். விவசாயிகளிடம் இருந்து கரும்பை வாங்கி பொங்கல் பண்டிகைக்கு கொடுப்பார்கள் என நம்பி தான் 40 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிட்டார்கள். திடீரென பண்டிகைக்கு கரும்பு இல்லை என்று கூறும்போது, இதை நம்பி பயிர் செய்த விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
2 மடங்கு கமிஷன்
கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும்.தமிழக அரசு அனைத்து பிரச்சினைகளியும் கமிஷன் வாங்குகிறது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது 7 ரூபாய் வாங்கிவிட்டு செய்த பணிகளை, திமுக ஆட்சிக்கு வந்த பின் 14 ரூபாய் வாங்குகிறது. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கமிஷன் பெறுகிறது என்று குற்றம்சாட்டினார்.
தனித்துப் போட்டி
தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் தனித்து போட்டியிடுவோம். 20 பெண்களுக்கும், 20 ஆண்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக வாய்ப்பு கொடுப்போம். யாருடனும் கூட்டணி கிடையாது. இது என் நாடு, என் தேசம். தமிழ் தேசம் இது என் மொழி என்று யார் என்னுடன் வந்து என் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்.