ஷாக் சம்பவம்! குறவர்கள் குடியிருப்பில் புகுந்து தாக்குதல்.. அதிமுக ஒன்றிய செயலாளர் மீது புகார்
கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே இலவச மனைப்பட்டா விவகாரத்தில் குறவர்கள் குடியிருப்பில் புகுந்து தாக்குதல் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம்புலியூர் மகத்துத்துரை கொள்ளிட கரையோரத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 7க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இந்நிலையில் நேற்று அங்குச் சென்ற வட்டாட்சியர் ராமதாஸ் தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாகவும், இந்த இடத்தை காலி செய்து சிதம்பரம் அருகே கூடுவெளி சாவடியில் தேர்வு செய்யப்பட்ட இடத்திற்குச் செல்லுமாறும் கூறினார்.
இதனையடுத்து அப்பகுதி வாசிகள் எங்களுக்கு ஓமாம்புலியூர் பகுதிகளில் இடம் தேர்வு செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் திடீரென அப்பகுதியில் வசிக்கும் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் துரை பாண்டியன் ஆதரவாளர்கள் 4 பேர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்தவர்களிடம் எங்கள் இடத்திலேயே பட்டா கேட்கிறாயா? உடனே காலி செய்யுங்கள்! என அவதூறு வார்த்தைகளால் கொலைமிரட்டல் விடுத்து வீடுகளைச் சேதப்படுத்தி அங்கு வசிக்கும் அய்யப்பன், சுமதி, ராம்கி, சிறுமி சுகன்யா ஆகியோரை தாக்கியுள்ளனர்.
இதனால் காயம் அடைந்த 4 பேரும் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தங்கராசு கொடுத்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.