வெள்ளி வேல் வேணாம்.. ஒரு லட்சம் பணமா கொடுங்க! பக்தரிடம் பேரம்பேசிய அறநிலையத்துறை அதிகாரி!
கடலூர்: கோயிலுக்கு நன்கொடையாக வெள்ளி வேல் கொடுப்பதற்கு பதிலாக பணமாக கொடுக்கலாம் என்று செயல் அலுவலர் பேசிய ஆடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ளது மணவாளநல்லூர் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோயில் உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இங்கு வரும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை கோரிக்கையாக மனு எழுதி கோவிலில் சமர்ப்பித்து கட்டணம் செலுத்துவது வழக்கம். தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதும், மீண்டும் இந்த கோயிலுக்கு வந்து தாங்கள் எழுதிவைத்த மனுவை எடுத்து விட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

வேண்டுதல்
பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். இதேபோல், தன்னுடைய வேண்டுதலாக 3 அடி உயரம் உள்ள வெள்ளி வேல் ஒன்றை நேர்த்திக்கடன்செலுத்த வந்தார் பக்தர் ஒருவர். வெள்ளி வேலுக்கு பதிலாக ஒரு லட்சம் ரூபாய் பணமாகவோ அல்லது வயரிங் பொருட்களாகவோ வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்று பக்தரிடம் கோயில் செயல் அலுவலர் தெரிவித்திருக்கிறார்.

வேல்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி என்ற பக்தர் கடந்த 2001-ம் ஆண்டு கொளஞ்சியப்பர் கோயிலுக்கு வந்து மனு எழுதி வைத்து வேண்டுதல் ஒன்றை வைத்துள்ளார். தற்போது அவரது பிரார்த்தனை நிறைவேறிய மகிழ்ச்சியில் தான் வேண்டியபடி 3 அடியில் வெள்ளி வேல் ஒன்றை கோவிலுக்கு நேர்த்திக்கடனாக சாத்த கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி எடுத்துச் சென்றுள்ளார்.

செயல் அலுவலர்
அப்போது அவரிடம் கோவில் செயல் அலுவலர் மாலா, வெள்ளி வேலுக்கான ரசீது இருக்கிறதா எனக்கேட்டுள்ளார். ஆனால் வெங்கடபதியிடம் ரசீது இல்லை. இதனால், வாட்சப் மூலம் அதற்கான ரசீதை பெற்று கோயில் செயல் அலுவலரிடம் காட்டியிருக்கிறார். ஆனால் அதை செயல் அலுவலர் ஏற்க மறுத்திருக்கிறார். ஒரிஜினல் இருந்தால் தான் வேலை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர்களை திருப்பி அனுப்பி உள்ளார்.

ரசீது
இதனால் வெங்கடபதி நேர்த்திக்கடன் செலுத்தாமல் வீட்டுக்கு வந்திருக்கிறார். ஒரிஜினல் ரசீதை எடுத்துக்கொண்டும் மீண்டும் கடந்த 31-ம் தேதி கோயிலுக்குச் சென்றார். வெள்ளி வேலை நேர்த்திக்கடனாக செலுத்த ரசீது பெற கோயில் நிர்வாக அதிகாரி அறைக்குச் சென்றார். அப்போதும் வெங்கடபதியிடம் வெள்ளி வேலை நேர்த்திக்கடனாக சார்த்த செயல் அலுவலர் அனுமதி கொடுக்கவில்லை.

ஆடியோ
''நீங்கள் வேண்டுதல் என்று கோவிலுக்கு வெள்ளி வேல் கொண்டு வந்து உள்ளீர்கள் அது செய்வதற்கு பதிலாக பணம் கொடுத்தால் எங்களுக்கு உபயோகப்படும் கோவிலில் அதிக வேலை உள்ளது தற்போது ஒயரிங் பண்ணுவதற்கு தேவைப்படுகிறது நீங்கள் மனது வைத்தால் வெள்ளி வேலுக்கு, பதிலாக வயர் வாங்கி தரலாம் ஒரு லட்சம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் நேர்த்திகடனாக செலுத்தப்படும் வேல் உடைக்கப்படும் அதனால் யாருக்கும் பயன்இல்லாமல் போய்விடும்'' என்று பக்தர் வெங்கடபதியிடம் கோயில் செயல் அலுவர் பேசயிருக்கிறார். இந்த ஆடியோ சர்ச்சையானதும், வெங்கடபதியின் வேல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications