Exclusive: ஓட்டு போடக் கூட ஊரில் இல்லை... ஆன்மிக யாத்திரை சென்றுவிட்டோம் -சத்யா பன்னீர்செல்வம்
கடலூர்: கட்சியிலிருந்து நீக்கபட்டாலும் தொடர்ந்து அதிமுக தொண்டராகவே தொடருவோம் எனக் கூறுகிறார் பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம்.
சத்யா பன்னீர்செல்வத்தின் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து அறிவதற்காக நாம் அவரிடம் பேசினோம்.
அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு;
அதிமுக வளர்ச்சி
''தலைவர் எம்.ஜி.ஆர். காலம் முதல் அதிமுகவின் வளர்ச்சிக்கு எங்கள் குடும்பம் அரும்பாடுபட்டு வருகிறது. தொகுதியை நல்ல முறையில் வைத்திருக்கிறோம். அதிமுக வேட்பாளராக பண்ருட்டியில் நிறுத்தப்பட்ட சொரத்தூர் ராஜேந்திரன் இந்த தொகுதிக்கே சம்பந்தமில்லாதவர். அவர் நெய்வேலி தொகுதியைச் சேர்ந்தவர். யார் சீட் எதிர்பார்த்து சீட் கிடைக்கவில்லையோ அவர்களுக்கு ஏமாற்றமும், வேகமும் இருப்பது இயல்பான ஒன்று தான்.''
மரியாதை இல்லை
''அதன் படி அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் எங்களுக்கும் ஏமாற்றமும், வருத்தமும் இருந்தது. சரி கட்சிக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு 4 நாட்கள் அமைதிகாத்தோம். ஆனால் வேட்பாளர் எங்களை சந்திக்கவில்லை, குறைந்தபட்சம் தொலைபேசியில் கூட அழைத்துப் பேசவில்லை. அதேபோல் தலைமையில் இருந்தும் யாரும் அழைத்துப் பேசி வேலை பார்க்குமாறு கூறவில்லை. எங்களை மதிக்காத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை எனக் கருதி அமைதியாக அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கைவிட்டோம்.''
தேர்தல் பணி
''அதற்கு பிறகு நாங்கள் எந்த மாற்றுக் கட்சிக்கும் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. குடும்பத்துடன் பிள்ளையார்பட்டி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் என ஆன்மிக யாத்திரை சென்றுவிட்டோம். இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு ஓட்டு போடக் கூட ஊருக்கு நாங்கள் வரவில்லை. தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து தான் பண்ருட்டிக்கே திரும்பினோம். அப்படி இருக்கும் போது அதிமுக வேட்பாளருக்கு எதிராக தேர்தல் பணியாற்றியதாக எப்படி எங்களை கூறமுடியும்?''
பரவாயில்லை
''முழுக்க முழுக்க பொய்யான தகவலை நம்பி இ.பி.எஸ். எங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். இப்போது உங்கள் வாயிலாக சொல்கிறேன், இ.பி.எஸ். கட்சியை விட்டு நீக்கினாலும் அவர் மீது நாங்கள் வைத்துள்ள மரியாதை தொடர்கிறது. அவர் மீதுள்ள மன வருத்தம் என்னவென்றால், ஒரு வார்த்தை அழைத்து விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுத்திருக்கலாம். பரவாயில்லை, கட்சியை விட்டு நீக்கினாலும் தொடர்ந்து அதிமுக அனுதாபியாகவே கடைசி வரை இருப்போம்.''