அதிமுக கொடிகளில் ஓபிஎஸ் - இபிஎஸ் புகைப்படம்.. விருத்தாசலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ருசிகரம்!
கடலூர்: விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக போராட்டத்தின் போது கட்டப்பட்டிருந்த கொடிகளில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் புகைப்படம் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே எழுந்த அதிகார மோதலில், எடப்பாடி பழனிசாமியின் கைகளே இதுநாள் வரை ஓங்கியுள்ளது. பொதுக்குழு முதல் அதிமுக அலுவலக சாவி வரை அனைத்து விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார். ஏற்கனவே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோரை தன் பக்கம் இழுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக தனது தலைமையினை தொண்டர்கள் மத்தியில் நிரூபிக்க போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

இபிஎஸ் அறிவிப்பு
அண்மையில் தமிழக மின்வாரியத்தின் கடன் மற்றும் மத்திய அரசு அழுத்தம் ஆகியவை காரணமாக மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்மூலம் தொண்டர்கள் மத்தியிலும் எடப்பாடி பழனிசாமிக்கே மவுசு இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியும் என்று பார்க்கப்பட்டது.

கடலூர் போராட்டம்
இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டன.

ஒரே கொடியில் இருவர்
இதேபோல் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை மூத்த நிர்வாகிகள் முன்வைத்து பேசினர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த கொடிகள், பேனர்கள், தோரணங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் புகைப்படங்களும் இடம்பெற்றன.

தொண்டர்கள் குழப்பம்
ஓபிஎஸ் - இபிஎஸ் இடையிலான மோதல் உச்சத்தில் உள்ள நிலையில், ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி மற்றவர்களின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு வருகின்றனர். இந்த சூழலில், இருவரது புகைப்படங்களும் ஒரே கொடியில் இடம்பெற்றுள்ள சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications