பசிப்பிணி போக்கிய வள்ளலார்...அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம் என ஸ்டாலின் ட்வீட்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார். பசிப்பிணி போக்கிய சமூக சீர்திருத்தவாதி ஜோதி வடிவாக இறைவனிடம் ஐக்கியமான தைப்பூச திருநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
கடலூர்: வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொல்லி ஜோதி ரூபமாக இறைவனிடம் இரண்டறக்கலந்தவர் வள்ளலார். தைப்பூச திருநாளில் ஜோதியாக காட்சியளிக்கிறார் வள்ளலார். வள்ளலார் ராமலிங்க அடிகள் அவர்களின் நினைவு நாளை போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களின் பசிப்பிணி போக்கிய வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகளார் அக்டோபர் 5, 1823 கடலூர் மாவட்டம் மருதூரில், ராமையாபிள்ளை - சின்னமைய்யார் தம்பதிக்கு மகனாக பிறந்தார். சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர் , சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களை கொண்டவர் வள்ளலார்.
தாராபுரத்தில் சோகம்.. ஆற்றில் குளிக்க சென்ற 5 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாப சம்பவம்
1867ஆம் ஆண்டு வடலூரில் தர்ம சாலை ஒன்றை தொடங்கி அனைவருக்கும் உணவு வழங்கினார். மக்களின் பசியை போக்க வழி கண்டவர் வள்ளலார். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துக்கள் அனைத்தும் முற்போக்காகவே பார்க்கப்பட்டன. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று முழங்கியவர் வள்ளலார். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்கள், திருவருட்பாவாக தொகுக்கப்பட்டுள்ளது. ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ள இது, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது.
ஆருட்பெரும் ஜோதி
கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். புலால் உணவு உண்ணக்கூடாது. எந்த உயிரையும் கொல்லக்கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும். எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்று கூறியுள்ளார். பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
உயிர் வதை கூடாது
சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது. நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
வள்ளலார் அறிவுரைகள்
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. குருவை வணங்கக் கூசி நிற்காதே. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார்.
ஜோதி வடிவத்தில் தரிசனம்
1874ஆம் ஆண்டு தை 19ஆம் தேதி ஜனவரி 30 ஆம் நாள் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நல்ல நாளில் வள்ளலார் ஜோதி வடிவாக கலந்தார். அந்த அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணையை இன்றைக்கும் அனைவரும் போற்றி வணங்கி வருகின்றனர். ஜோதி திருவிழா வடலூரில் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. இன்றைய தினம் தைப்பூசத்தை முன்னிட்டு ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.
அணையா அடுப்பு
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது. அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.
மனித நேயம் தழைக்கும்
வள்ளலாரின் பிறந்தநாள் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். வள்ளலார் ஜோதியாக கலந்த தைப்பூசம் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகள் அவர்களின் நினைவு போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.