ஞாயிறு முழு லாக்டவுன்... திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் வாசலில் நடந்த திருமணங்கள்
ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் தினமான இன்று திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மூடப்பட்டிருந்ததால் சாலைகளில் திருமணங்கள் நடைபெற்றன.
கடலூர்: முழு ஊரடங்கு தினமான இன்று திருமண முகூர்த்தம் உள்ளதால் கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும் கோபுர வாசலில் உள்ள சாலைகளில் உறவினர்கள் முன்னிலையில் திருமணங்கள் நடைபெற்றன. 50க்கும் மேற்பட்ட புதுமணத்தம்பதியினர் சாலைகளிலேயே மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
Recommended Video
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தேவநாதசுவாமி கோயில் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறும்.
4 வயது சிறுவனை கொலை செய்து.. பீரோவில் அடைத்து வைத்த கொடூர பெண்.. அப்படியே அரண்டு போன மக்கள்!
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் முறையாக மணமக்களின் குடும்பத்தினர் திருமணத்திற்கான அனுமதி வேண்டி விண்ணப்பித்த பிறகு தான் இங்கு திருமணம் நடத்தப்படும். அதற்காக, அவர்களுக்கு அரசின் மூலம் பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.
கோவில்களில் அனுமதியில்லை
நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அந்த 3 நாட்களும் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண வரம் தரும் பெருமாள்
திருமண தடை நீக்கும் தலமாக தேவநாதசுவாமி கோயில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள். 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
சாலையில் திருமணம்
இந்நிலையில் இன்று முகூர்த்த நாளில் பல்வேறு குடும்பத்தினர் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் திருமணம் நடத்துவதாக முன்பே திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கோயில் மூடப்பட்டதால் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மூடப்பட்ட கோயிலின் எதிரே உள்ள சாலையில் தங்களது முக்கியக் உறவினர்களுடன் திருமணங்களை நடத்தினர்.
கொரோனா முன்னெச்சரிச்கை
இன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட திருமணங்கள் சாலைகளிலேயே நடைபெற்றன. திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருமணத்திற்கு வந்திருந்த மணமக்கள் மற்றும் உறவினர்களை முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தினார்.
விதிமுறைகளை பின்பற்றி திருமணம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் வாசலில் ராஜன், தேவி தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது அதேபோல் தண்டையார்பேட்டை தனியார் மண்டபத்தில் தொழிலதிபரின் இல்ல திருமண மணமகன் ஜீவா, சங்கீதா, மணமக்களின் திருமணம் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அதேபோல் திருவொற்றியூர் பகுதியில் வீட்டில் தினகரன் பிரியங்கா ஆகியோரது திருமணம் வீட்டில் எளிமையாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட உறவினர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்.