பள்ளி மாணவியை இரண்டாவது திருமணம் செய்த ஆசிரியர்.. 3வது கல்யாணத்துக்கு வேற ப்ளான்
கடலூர் : கடலூர் அருகே பள்ளி மாணவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துகொண்டதோடு மூன்றாவது திருமணத்திற்கும் முயற்சித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகளில் படித்து வரும் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கல்விக்கண் திறக்க வேண்டிய ஆசிரியர்கள் சில நேரங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொடூரர்கள் ஆக மாறும் சம்பவங்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தின் வருகிறது.
இந்த நிலையில் கடலூர் அருகே பள்ளி மாணவி ஒருவரை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்த ஆசிரியர் அவரைப் பிரிந்ததோடு மூன்றாவது திருமணத்திற்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா.. 25 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு.. சென்னையில் மட்டும் இவ்வளவா?
அதிர்ச்சி சம்பவம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுவீரப்பட்டு வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் மருங்கூர் அரசுப் பள்ளியில் 2017ஆம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றியபோது தன் வகுப்பில் படித்த மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து அவர் அந்த பள்ளி மாணவியை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அரசுப் பள்ளி ஆசிரியர்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் மைனர் திருமணம் குறித்து கடலூர் சமூக நல துறையினர் விசாரணை செய்தனர். மேலும் ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யவும் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு கடலூர் சமூகநலத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர் இதையடுத்து மாணவியை ஏமாற்றி திருமணம் செய்ததாக ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மாணவி புகார்
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த நான்கு வருடங்களாக விசாரணையில் இருந்து வரும் நிலையில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு வயது ஆகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரண்டாவது திருமணம் செய்த மாணவியின் வீட்டிற்கு ஆசிரியர் பன்னீர்செல்வம் செல்வதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாணவி ஆசிரியர் ஏன் வீட்டுக்கு வரவில்லை என கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் பிரிந்து நாளடைவில் தனியாக வாழ்ந்து வந்தனர். சில நாட்களுக்குப்பின் நீதிமன்றத்தில் தனது விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் தனக்கும் தனது மகளுக்கும் ஆசிரியர் பன்னீர்செல்வம் ஜீவனாம்சமாக குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆசிரியர் கைது
இந்த நிலையில் நீதிமன்றத்தில் சமரசம் செய்த போது தனக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என மாணவி கூறியதோடு தான் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்திருந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார். ஆசிரியர் பன்னீர்செல்வத்தை கைதுசெய்து சிறையில் அடைக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பன்ருட்டி அனைத்து மகளில் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பன்னீர் செல்வத்தை கைது செய்தனர். இந்த நிலையில் ஆசிரியர் பன்னீர்செல்வம் மூன்றாவது திருமணத்திற்காக ஏற்பாடு செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது பன்னீர்செல்வம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.