"களவு போன எனது அப்பாச்சி பைக்கை போலீஸ்காரர் ஓட்டுகிறார்".. தஞ்சையில் தவிப்புடன் தொழிலாளி புகார்!
கடலூர்: விருத்தாச்சலத்தில் திருடு போன தனது பைக்கை நாகையில் போலீஸ்காரர் ஒருவர் ஓட்டி வருவதாக வெற்றிவேல் என்பவர் போலீசில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலியே பயிரை மேய்ந்தது என்று சொல்வது போல திருடு போன பைக்கை வேறு ஒரு மாவட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் பயன்படுத்துவதாக கூறி விருதாசலம் போலீசாரை அதிரவைத்து இருக்கிறார் வெற்றிவேல் என்ற நபர்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ள வெற்றிவேல் போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக அலுவலகம் சூறை..திருடு போனது என்ன? சி.வி. சண்முகத்திடம் சிபிசிஐடி போலீஸ் வாக்குமூலம்
சிவப்பு கலர் அப்பாச்சி பைக்
வெற்றிவேல் (வயது 40) தஞ்சை சரக டிஐஜியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள வேட்டைக்குடி பகுதியை சேர்ந்த நான் கடந்த 25.07.2018 ஆம் தேதி தனியார் நிதி நிறுவனம் மூலம் டிவிஎஸ் அப்பாச்சி 160 என்ற இருசக்கர வாகனத்தை வாங்கினேன். TN.91 T 1143 என்று பதிவு கொண்ட அந்த சிவப்பு கலர் அப்பாச்சி பைக்கை கடந்த 10.12.2021 ஆம் தேதி இரவு தனது சகோதரர் வீட்டில் நிறுத்திவிட்டு சென்றேன்.
காணாமல் போனதாக கம்ப்ளைண்ட்
இந்நிலையில் நான் மறுநாள் அதிகாலை எழுந்து வந்து பார்த்த போது தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சிக்குள்ளான நான் போலீசில் புகார் அளித்துவிட்டு அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டேன். இந்த நிலையில், கடந்த மாதம் எனது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.100 அபராதம் போடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அளித்த அபராதம்
பைக் களவு போன வருத்தத்தில் இருந்த எனக்கு இந்த தகவல் மேலும் அதிர்ச்சி கொடுத்தது. எனது நண்பர்கள் சிலருடன் நாகை மாவட்டம் சென்ற நான் அங்கு எனது பைக் கிடைக்குமா? என தேடி அலைந்தேன். அப்போது நாகை மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வரும் ஒருவர் எனது பைக்கை வைத்திருப்பதை கண்டுபிடித்தேன். எனது பைக்கை பயன்படுத்துபவர் போலீஸ்காரர் என்பதால் அவரிடம் இது குறித்து பேசுவதற்கு பயமாக உள்ளது.
போலீஸ்காரரிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்
எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து களவு போன எனது பைக்கை சம்பந்தப்பட்ட போலீஸ்காரரிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். களவு போனதாக புகார் தொடுக்கப்பட்டு இருந்த நிலையில், காவலர் ஒருவரே அந்த பைக்கை ஓட்டி வருவதும் இந்த பைக்கை மீட்டுத்தர வேண்டும் என்று போலீசாரிடம் தொழிலாளி புகார் அளித்து இருப்பதும் கடலூர் மாவட்டத்தில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக அல்லவா? இது உள்ளது என்றும் அப்பகுதி மக்கள் பேசிக்கொள்வதை பார்க்க முடிந்தது.