கடன் தொகை நிலுவை.. மின்சாரம் வாங்க நாளை முதல் தடை.. தமிழ்நாட்டில் மீண்டும் மின்தடைக்கு வாய்ப்பு?
டெல்லி: நிலுவையில் உள்ள கடன் தொகை செலுத்தாததால் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை மின்வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தமிழ்நாட்டில் மின்சார பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
Recommended Video
மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் (POSOCO) செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் (Gencos) மூலம் மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு(discoms) மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதையடுத்து டிஸ்காம்ஸ் சார்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்கங்களுக்கு(gencos) பணம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது பல மாநிலங்களில் உள்ள டிஸ்காம்ஸ் சார்பில் மின்சாரத்துக்கு பணம் செலுத்தாமல் உள்ளது.
மின்சார சட்டத் திருத்தத்தால் மாநில உரிமையைப் பறிப்பதா? வாபஸ் பெற மத்திய அரசுக்கு சீமான் வேண்டுகோள்!
12 மாநிலங்களில் கடன்
குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் மின் வினியோக நிறுவனங்கள் பாக்கி தொகை வைத்துள்ளன. இந்த 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் சார்பில் மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி வரை பாக்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு கடன் எவ்வளவு?
இதில் தெலங்கானா அதிகபட்சமாக ரூ.1,380 கோடி பாக்கி வைத்துள்ளது. தமிழ்நாடு ரூ.926.16 கோடி பாக்கி உள்ளது. மேலும் கர்நாடகாவில் 355.2 கோடி, மகாராஷ்டிராவில் 381.66 கோடி, மத்திய பிரதேசத்தில் 229.11 கோடி, ராஜஸ்தானில் 500.66 கோடி, ஆந்திராவில் 412.69 கோடி, ஜார்கண்டில் 214.47 கோடி வரை கடன் உள்ளது.
நாளை முதல் அமல்
இதற்கிடையே தான் புதிய லேட் பேமென்ட் சர்சார்ஜ் (எல்பிஎஸ்) விதிகளின் கீழ் 7 மாதங்களுக்கும் மேலாக டிஸ்காம்கள் நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்தால் அவை மின்சார வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது. இதனால் கடனாக உள்ள பாக்கி தொகை செலுத்தவில்லை என்றால் மின்வர்த்தகத்தில் தடை விதிக்க முடியும். இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு உள்பட 12 மாநிலம், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் மின்சாரம் வர்த்தகம் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மின்தடைக்கு வாய்ப்பு
இதனால் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் ஆகியவை மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் (POSOCO) மின்பகிர்மானம் செய்து கொள்ள முடியாத நிலை உருவாகும். இதனால் மீண்டும் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு மின்தடை ஏற்படலாம் என கூறப்படுகிறது.