'சுதந்திரத்துக்காக 16 ஆண்டுகள் சிறைவாசம்'.. பலரும் அறியாத லால்மோகன் சென்னின் ஆச்சர்ய வரலாறு!
டெல்லி: இந்தியா தற்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், இதற்காக பெரும் பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களில் பலரும் அறியாத வங்காளத்தில் பிறந்த லால் மோகன் சென் வாழ்க்கை குறிப்பினை இதில் பார்க்கலாம்.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாட்டின் 75 வது சுதந்திர தினம் என்பதால் இந்தியா இந்த சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடியும் இந்த முக்கியமான தருணத்தில் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்ட சுதந்திர போராட்ட்ட வீரர்களை பற்றி அறிந்து கொள்ளுமாறு இளைஞர்களை கேட்டுக்கொண்டார்.

லால் மோகன் சென்
நாட்டின் சுதந்திர போரில் பங்கேற்று அதிகம் கொண்டாடப்படாத தலைவர்களின் வரலாறுகளை நாம் பார்த்து வருகிறோம். அப்படி இன்று நாம் பார்க்க இருப்பது லால் மோகன் சென் என்பவரைப் பற்றித்தான். சிட்டகாங் ஆயுத கிடங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கெடுத்தவர்களில் முக்கியமானவர் லால்மோகன் சென். இதற்காக 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த லால் மோகன் சென், விடுதலையான சில காலத்திற்குள் நவகாளியில் இந்துக்களுக்கு எதிரான படுகொலயின் போது கொல்லப்பட்டார்.

மருத்துவ உயர்கல்வி பயின்றார்
பிரிக்கப்படாத வங்காளத்தின் சட்டகிராம் முச்சாபூர் கிராமத்தில் லால்மோகன் சென் பிறந்தார். சிட்டகாங் கடற்கரையோரம் அமைந்துள்ள நவகாளி மாவட்டத்தில் வசித்த இந்து காயஸ்தா குடும்பத்தில் 1912ம் ஆண்டு லால்மோகன் சென் பிறந்தார். அவரின் துவக்க கால வாழ்க்கை பற்றியோ கல்வி பற்றியோ எந்த தகவலும் இல்லை. எனினும், புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபட தொடங்கும் போது அவர் மருத்துவ உயர்கல்வி பயின்றதாக தகவல் உள்ளது. சூர்யா சென் தலைமையிலான இந்திய குடியரசு ராணுவத்தால் ஈர்க்கப்பட்ட லால்மோகன் சென் அதில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சட்டகிராம் சிறையில் அடைக்கப்பட்டார்
1930ம் ஆண்டு சட்டகிராம் பகுதியை நாட்டின் பிற பகுதியில் இருந்து தனிமைப்படுத்தும் வகையில் ரயில்வே வழித்தடங்களை சேதப்படுத்தும் பணி லால்மோகன் சென்னுக்கு வழங்கப்பட்டது. இந்தப்பணியை சிறப்பாக லால்மோகன் செய்து காட்டினார். ஆனால் அதே ஆண்டு கைது செய்யப்பட்ட லால்மோகன் சென், சட்டகிராம் சிறையில் அடைக்கப்பட்டார். லால்மோகன் சென்னுக்கு எதிரான வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணை தீர்ப்பாயம், அவருக்கு இடமாற்றத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது.

குத்திக்கொல்லப்பட்டார்
இதையடுத்து, அந்தமான் சிறை மற்றும் பிற சிறைச்சாலைகளில் மாறி மாறி அடைக்கப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு 1946ம் ஆண்டு டாக்கா சிறையில் இருந்து பரோலில் லால் மோகன் சென் விடுவிக்கப்பட்டார். பிறகு தனது சொந்த ஊரான நவகாளி கிராமத்திற்கு சென்று அங்கு வசித்தார். அந்த சமயத்தில் நவகாளி கிராமத்தில் பெரும் வகுப்பு வாத கலவரம் வெடித்தது. 1946 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த கோரிக்கையையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக நவகாளி மாவட்டம் மற்றும் திப்பெராவில் வன்முறை வெடித்தன. இந்த வன்முறையை தடுக்க முயற்சித்த போது குண்டர்களால் லால்மோகன் சென் குத்திக்கொல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications