லடாக் எல்லையில் பாலம் கட்டும் பணி.. கால்வன் ஆற்றில் மூழ்கி இந்திய வீரர்கள் 2 பேர் மரணம்
டெல்லி: லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியின் போது மேலும் இரு இந்திய வீரர்கள் ஆற்றில் மூழ்கியதில் உயிரிழந்தனர். இவர்களது இறுதி சடங்குகள் நேற்று நடத்தப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை. எனினும் இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கால்வன் ஆற்றின் குறுக்கே இந்தியா பாலம் கட்டி வருகிறது. இந்த பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாட்டியாலாவை சேர்ந்த லாஞ்ச் நாயக் சலீம் கானும் (23) மாலேகானை சேர்ந்த விக்ரம் மோர் (37) ஆகியோரும் கால்வன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழப்பு
இதுகுறித்து இருவரது குடும்பத்தினரும் கூறுகையில் கால்வன் பகுதியில் பாலம் கட்டும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் சலீம் கான் வெள்ளிக்கிழமை உயிரிழந்துவிட்டார் என எங்களுக்கு தெரிவித்தனர். மேலும் கான் படகில் சென்ற போது படகு கவிழ்ந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

தண்ணீரில் மூழ்கி
இரு வேறு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய போது அவர்களை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்தபோது விக்ரம் மோரின் தலை பாறையில் மோதியதில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்துவிட்டதாக ராணுவம் சார்பில் கூறப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கண்ணீர்
விக்ரம் மோர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தன்னுடன் பேசியதாகவும் கால்வனில் எந்த பதற்றமம் இல்லை என்றும் தான் நன்றாக இருப்பதாகவும் கவலைப்பட வேண்டாம் என்றும் விக்ரம் கூறியதாக அவரது தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார். சலீம் கானின் தாய் நசீமா பேகம் கூறுகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சலீமுடன் பேசினேன்.

இழந்துவிட்டேன் என கண்ணீர்
அவர் விரைவில் ஊருக்கு வருவதாக தெரிவித்தார். அங்குள்ள சூழல் குறித்து அவர் எதையும் தெரிவிக்கவில்லை. போன் இணைப்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்படலாம். அதனால் நான் போன் செய்யாவிட்டாலும் அச்சப்பட வேண்டாம் என்றார். தற்போது அவரை நான் இழந்துவிட்டோம். எங்களது ஒரே ஆறுதல் அவர்தான் என்றார் நசீமா. கான் கடந்த 2014-ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். அவருக்கு தாயும், உடன்பிறந்தவர்கள் இருவரும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications