ரூ25 ஆயிரத்துக்கு கைரேகை மாற்று அறுவை சிகிச்சை.. குவைத் விசா பெற நடந்த மோசடி.. பரபர பின்னணி தகவல்!
டெல்லி: ஐதராபாத்தில், 25 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு கைரேகையை மாற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொடுத்து குவைத் விசா பெறுவதற்கு உதவிய இரண்டு பேரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் கைரேகைக்கு முக்கிய பங்கு உள்ளது.
இதனால், திருட்டு,கொலை போன்ற குற்றசெயல்களில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்படுகிறது.
விநாயகர் சிலைகளில் ஜிபிஎஸ்.. கூகுள் மேப்பில் டிராக்கிங்! பிரச்னை செய்தாலே கைது தான்! போலீஸ் வார்னிங்
மோசடி சம்பவம்
ஆனால், இதிலும் குற்றவாளிகள் தப்பிவிட முடியும் என்பது சொல்வது போலத்தான் ஐதராபாத்தில் ஒரு மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர்களை மீண்டும் அந்நாட்டுக்கு சட்ட விரோதமாக வேலைக்கு அனுப்புவதற்காக கைரேகையை அறுவை சிகிச்சை மூலமாக மாற்றி நடைபெற்ற ஒரு மோசடி சம்பவம் ஐதராபாத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
11 அறுவை சிகிச்சைகள்
ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த ரேடியோலாஜிஸ் மட்டும் எக்ஸ் ரே டெக்னிஷியனான கஜ்ஜலகோண்டுகரி நாக முனேஸ்வர ரெட்டி (வயது 36) மற்றும் 39 வயதான சகபாலா வெங்கட் ரமணா என்ற இருநபர்களும் ரூ 25 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியாக கை ரேகையை மாற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்து வந்துள்ளனர். ராஜஸ்தான் மற்றும் கேரளா என மொத்தம் 11 அறுவை சிகிச்சைகளை இருவரும் செய்துள்ளனர்.
கைரேகையை மாற்ற அறுவை சிகிச்சை
ஐதராபத்தில் ஓட்டல் அறையில் தங்கியிருந்த இருவரும் போலீசார் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ''போவில்லா ஷிவ சங்கர் ரெட்டி (வயது 25) மற்றும் ரெண்டலா ராம கிருஷ்ணா (வயது 38) ஆகிய இருவரும் குவைத்தில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்ததாகவும் குவைத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டதற்காக இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்த இருவரும் மீண்டும் குவைத்திற்கு செல்வதாக எங்களை அணுகினர் என்றும் அவர்களுக்கு கைரேகையை மாற்ற அறுவை சிகிச்சை செய்ததாகவும் தெரிவித்தனர்'' என்று போலீசார் தெரிவித்தனர்.
ஒரு வருடம் வரை இருக்கும்
கைரேகையை மாற்ற அறுவை சிகிச்சை எப்படி நடந்தது என்பதை விளக்கிய போலீசார், இது குறித்து கூறுகையில், ''கைவிரலில் உள்ள மேல் லேயரை அகற்றிவிட்டு திசுக்களில் உள்ள சில பகுதிகளை அகற்றிவிட்டு தைத்துவிடுவோம். திசுக்கள் வளர்ந்து குணம் ஆகும் போது கை ரேகையில் சிறிய மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றம் ஒரு வருடம் வரை இருக்கும். இந்த அறுவை சிகிச்சை செய்த நபர்கள், புதிதாக தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்து ஆதார் கார்டை போலி முகவரியில் பெற்று வருகின்றனர். இதன் மூலம் குவைத்திற்கு புதிய விசா விண்ணப்பிக்கின்றனர்'' என்றார்.
விரிவான விசாரணை
குவைத்திற்கு மீண்டும் செல்வதற்காக அறுவை சிகிச்சை செய்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த மெடிக்கல் கிட்கள் மற்றும் சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.