3 பேர் குழு அமைப்பு... எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யார்... டி.ஆர்.பாலு பரபரப்பு..!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளரை முடிவு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இதில் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் பொதுவான ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தரப்பில், 22 எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க 22 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 16 கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து மல்லிகார்ஜுனா கார்கே, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். திமுக சார்பில் டி.ஆர்.பாலு, சிவசேனா சார்பாக ப்ரியங்கா சதுர்வேதி, மதசார்பற்ற ஜனதாதளம் சார்பாக தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக சரத் பவார், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல் இந்த ஆலோசனை கூட்டத்தை ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் மற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பெயர் முன்மொழியப்பட்டது. ஆனால் அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளின் சார்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுனா கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சியி சரத் பவார் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரைத் தேர்வு செய்வர். மீண்டும் இதேபோல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், ஜூன் 21ஆம் தேதிக்குள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.