5ஜி அலைக்கற்றை: எதிர்பார்த்த ரூ4.3 லட்சம் கோடி கிடைக்கவில்லை! ரூ 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம்!
டெல்லி: 5 ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தம் ரூ1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே விற்பனை ஆகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் அக்டோபர் மாதம் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி கடந்த வாரம் (ஜூலை 26) 5 ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
ஏலத்துக்கு முன்வைக்கப்பட்டது மொத்தம் மெகாஹெர்ட்ஸ் 72,098. இதில் 51,236 மெகாஹெர்ட்ஸ் மட்டும் ஏலம் எடுக்கப்பட்டது.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், அதானி டேட்டா நெட் வொர்க்ஸ் பங்கேற்றன.
ஏலம் எடுக்கப்பட்ட விவரங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ 24,740 மெகாஹெர்ட்ஸ்- ரூ.88,078 கோடி
ஏர்டெல் - 19,867 மெகாஹெர்ட்ஸ்- ரூ.43,084 கோடி
வோடஃபோன்- ரூ.18,784 கோடி
அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் - 400 மெகாஹெர்ட்ஸ்- ரூ.212 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளன.
ஆதிக்கம் செலுத்திய அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! உண்மையான 5ஜி அவர்கள்தானாம்
5 ஜி அலைக்கற்றையின் மொத்த ஏலம் மதிப்பு ரூ4.3 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டது. ஆனால் மொத்த ஏலமே ரூ1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே போயிருக்கிறது. இது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை அரசு ஏலம்விட்டது. இதில் 51.236 மெகாஹெர்ட்ஸ் (மொத்தத்தில் இது 71%) ரூ. 1,50,173 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது.
அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் 400 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. பார்த்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனம் 19,867.8 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் 24,740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. வோடபோன் ஐடியா லிமிடெட் 6,228 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.
மொத்த ஏலத்தொகையான ரூ.1,50,173 கோடியில் அதானி டேட்டா நெட்ஒர்க்சின் ஏலத்தொகை ரூ.212 கோடி, பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.43,048 கோடி, ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமின் ஏலத்தொகை ரூ.88,078 கோடி வோடப்போன் ஐடியா நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.18,799 கோடி ஆகும். அனைத்து பங்கேற்பாளர்களால் வழங்கப்படவுள்ள வருடாந்திர தவணைத்தொகை ரூ.13,365 கோடி. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.