டெல்லி சென்ற விமானம்... நடுவானில் 6 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்
டெல்லி: டெல்லிக்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்த போதே 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பாட்னாவில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 6 மாதக் குழந்தையை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். குழந்தைக்கு ஏற்பட்டுள்ள இதயக் கோளாறை சரிசெய்யும் பொருட்டு மேல் சிகிச்சைக்காக குழந்தை அழைத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதையறிந்த சக பயணிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை அடைந்ததும் குழந்தையின் இறப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, துணை போலீஸ் கமிஷனர் (டெல்லி விமான நிலையம்) சஞ்சய் பாட்டியா கூறுகையில், ஸ்பைஸ்ஜெட் விமானம் எஸ்ஜி 8481 விமானத்தில் பெண் குழந்தை இறந்துவிட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது. பீகாரின் பெகுசாரை பூர்வீகமாகக் கொண்ட குழந்தை பிறவிலேயே, இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது இதயத்தில் ஒரு சிறிய துளை இருந்தது, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க பெற்றோர் விமானத்தில் அழைத்து வந்துள்ளனர் என்றார்.
இதனிடையே, மருத்துவ உதவிக்காக, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவக் குழு , குழந்தையை பரிசோதித்ததில் இறந்து விட்டதாக தெரிவித்தனர் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications