திருமணத்துக்காக நரபலி கொடுக்க கடத்தப்பட்ட 7 வயது சிறுமி.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய போலீஸ்!
டெல்லி: விரைவில் திருமணம் நடப்பதற்காக சிறுமியைக் கடத்தி நரபலி கொடுக்க இருந்த நிலையில், அதை போலீஸார் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளது போலீஸ்.
சமீபகாலமாக இந்தியா முழுவதும் நரபலி கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் கைக்குழந்தை முதல் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை நரபலி கொடுக்கும் பழக்கம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்திலும் தற்போது ஒரு நரபலி தொடர்பான சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் நரபலி கொடுப்பதற்கு முன் சிறுமியை உயிரோடு மீட்டுள்ளனர் காவல்துறையினர்.

உத்தரப்பிரதேச சிறுமி
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 13-ந்தேதி திடீரென காணாமல் போனார். எங்கு தேடியும் மகளை காணாததால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெற்றோர்கள் சிறுமியைக் காணவில்லை என போலீஸில் புகார் அளித்தனர். போலீசார் மாயமான சிறுமியை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விசாரணை
இந்நிலையில் சிறுமி காணாமல் போனது குறித்து சிஜர்சி கிராமத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த கிராமத்தில் கண்காணிப்பு கேமரா இருப்பதைப் பார்த்து, அந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இதே ஊரைச் சேர்ந்த சோனு பால்மிகி என்பவர் சிறுமியைக் கடத்தி இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சிறுமி டெல்லி பாக்பத் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

நரபலி
போலீஸ் விசாரணையில், காணாமல் போன சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தான் சோனு பால்மிகி என்பது தெரியவந்தது. சோனு பால்மிகிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் கைகூடவில்லை. திருமணத்துக்கு தொடர்ந்து தடை ஏற்பட்டதால் சதேந்திரா என்கிற மந்திரவாதியை சந்தித்து தனது திருமண தடங்கல் பற்றி கூறினார். அப்போது மந்திரவாதி அவரிடம் ஹோலி பண்டிகையன்று சிறுமியை நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என யோசனை தெரிவித்தார்.

கடத்தல்
இதுகுறித்து சோனு தன்னுடைய நண்பன் நீதுவிடம் நரபலி கொடுப்பது பற்றி கூறியுள்ளார். இதையடுத்து 2 பேரும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 7 வயது சிறுமியை கடத்தி நரபலி கொடுக்க முடிவு செய்தனர். இரண்டு தினங்களுக்கு முன் இருவரும் சிறுமியிடம் பேச்சு கொடுத்து தனியாக அழைத்துச்சென்று, அங்கிருந்து சிறுமியைக் கடத்தி உள்ளனர். அதையடுத்து டெல்லியில் உள்ள பாக்பத் பகுதியில் வசித்து வரும் சோனுவின் சகோதரி வீட்டில் அந்த சிறுமியை அடைத்து வைத்தனர்.

கைது
டெல்லியில் வைத்து சிறுமியை நரபலி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அதற்குள் போலீசார் சென்று சிறுமியை மீட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மந்திரவாதி சதேந்திரா உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். போலீசாரின் இந்த துரித நடவடிக்கையால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருப்பதாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications