“நீதித்துறை ஊழல்துறை”.. மன்னிப்பு கேட்ட மறுநாளே இப்படியா? காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் பதிவால் சர்ச்சை
டெல்லி: நீதிபதி பாரபட்சமாக நடந்துகொண்டதாக கருத்து தெரிவித்தற்காக நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இன்று நீதித்துறையை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பீமா கோரேகான் வழக்கில் 70 வயதான சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகா உட்பட 16 பேர் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அப்போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.முரளிதர், கவுதம் நவ்லகாவை சிறையில் அடைக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, வீட்டுக் காவலில் வைக்கலாம் என உத்தரவிட்டார்.
நீதிபதி மீது அவதூறு.. “சாரி” கேட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்! நேரில் வாங்க - டெல்லி ஹைகோர்ட் குட்டு
நீதிமன்ற அவமதிப்பு
இந்த நிலையில் நீதிபதி பாரட்சமாக நடந்துகொண்டதாக இந்த வழக்கை சுட்டிக்காட்டி 2018 ஆம் ஆம் ட்விட்டரில் விமர்சித்தார் காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. இதனை நீதிமன்ற அவமதிப்பாக கருதி டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை தாமாக முன்வந்து எடுத்து விசாரித்து வருகிறது.
மன்னிப்பு கேட்ட இயக்குநர்
நேற்று இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த விவேக் ரஞ்சன், தன்னுடைய கருத்துக்காக நீதிமன்றத்திடம் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். நீதிபதியை விமர்சித்து விவேக் ரஞ்சன் வெளியிட்ட ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டதாகவும் அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதிகள் மார்ச் மாதம் வழக்கை ஒத்திவைத்துடன் அடுத்தமுறை விவேக் ரஞ்சன் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
நீதித்துறை மீது விமர்சனம்
இந்த நிலையில் இன்று காலை நீதித்துறை குறித்து ட்விட்டரில் பதிவிட்ட விவேக், இந்திய நீதித்துறையில் 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், மேலும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் ஃபைல்ஸ் படம்
கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் வெளியான விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபவம் கேர் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறிய இப்படத்தில் ஜம்மு காஷ்மீரில் 80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட வன்முறையின்போது காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதாக காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.
பாராட்டிய பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி இப்படத்தை கண்டு இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். பாஜக ஆளும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா, உத்தராகண்ட், கோவா, திரிபுராவில் இந்த படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.
மதவெறுப்பு
ஆனால், மதவெறுப்பை பரப்பும் வகையில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் உள்ளதாக காங்கிரஸ், இடதுசாரிகள், இஸ்லாமிய அமைப்பினர் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தனர். இதற்கு தடைவிதிக்கவும் பலர் வலியுறுத்தினர். இந்த நிலையில் கோவா சர்வதேச திருவிழாவிற்கும் இப்படம் பரிந்துரை செய்யப்பட்டது.
கோவா திரைப்பட திருவிழா
கடந்த வாரம் நிறைவடைந்த இந்த திரைப்பட திருவிழாவில், பேசிய அதன் தேர்வுக்குழு தலைவர் நாதவ் லாபிட் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தார். வெறுப்புணர்வை பரப்பும் இழிவான படம் காஷ்மீர் பைல்ஸ் என அவர் கடுமையான சாடினார். பெருமைக்குரிய கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் பொறுத்தமற்ற இந்த படத்தை தேர்வு செய்துள்ளது அதிர்ச்சி தருவதாக என்று அவர் கூறினார்.
கடும் விமர்சனம்
"காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தால் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தோம். காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட திருவிழாவுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு மேடையிலேயே நாங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்." என அவர் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, "உண்மை மிகவும் ஆபத்தான ஒன்று. அது மக்களை பொய் சொல்ல வைக்கும்." என்றார்.