வாக்காளர் அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்காமல் விடலாம்.. ஆனால் காரணம் சொல்லவேண்டும்- தேர்தல் ஆணையர்
டெல்லி: இந்தியாவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பது தொடர்பான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதன்மூலம் வாக்காளர்களுக்கு பயன் கிடைப்பதோடு, தேர்தல் மீதான நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்'' என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறினார்.
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பு வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
ரணில் விக்ரமசிங்க பிரதமரான 3 நாளில் குவியும் கடன் உதவி... ரூ.15,000 கோடி கொடுக்கும் ஜப்பான்
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பணியின் கடைசி நாளான இன்று சுஷில் சந்திரா தனது பதவி காலத்தில் செய்த சாதனைகள் பற்றி பகிர்ந்து கொண்டார். சுஷில் சந்திரா கூறியதாவது:
2 சீர்த்திருத்தங்கள்
இந்தியாவின் தலைமை தேர்தல் அதிகாரியாக நான் பொறுப்பு வகித்த காலத்தில் இரண்டு முக்கிய தேர்தல் சீர்த்திருத்தங்கள் செய்துள்ளேன். 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடைமுறை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் என்ற அளவில் உள்ளது. இது தற்போது 4 முறையாக மாற்றப்பட உள்ளது. இந்த நடவடிக்கை 20 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அனுமதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் ஒருபகுதியாக தான் அது அமைந்துள்ளது.
ஆண்டு 4 முறை பெயர் சேர்ப்பு
இதற்கு முன்பு ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்கு முன் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யலாம். ஜனவரி 2 அல்லது அதற்கு பிறகு 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய ஓராண்டு காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த மசோதா விதிகள் மூலம் 18 வயது நிரம்பும் நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடைமுறை 4 தடவை நடக்கும்.
ஆதாருடன் இணைப்பு
மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது ஆகும். இது வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும். தேர்தல் மீதான நம்பிக்கையை இது அதிகரிக்கும். வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்படவில்லை. சுயவிருப்பத்தின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில் விதிகள் வெளியீடு
வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது தொடர்பான விதிகள் வெளியிடுவதற்கான வரைவுகளை ஏற்கனவே அனுப்பி உள்ளோம். இதன்மூலம் விரைவில் விதிகள் வெளியிடப்படும். இதன்மூலம் ஆதாருடன் வாக்காளர் அட்டையை எளிமையாக இணைக்கலாம். இதை செய்யாவிட்டால் அதற்குரிய காரணங்களை தெரிவிக்க வேண்டி இருக்கும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பதன் மூலம் தொலைபேசி எண்களில் பூத் விவரங்கள் போன்ற பல சேவைகளை வழங்க முடியும்.
கொரோனா சவால்கள்
கொரோனா சமயத்தில் ஐந்து மாநில தேர்தல், இடைத்தேர்தல்கள் நடத்துவது என்பது சிரமமான காரியமாக இருந்தது. ஏனென்றால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்த காலமாக அது இருந்தது. தேர்தலால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்ற சூழல் இருந்தது. ஒமிக்ரான் பரவல் பற்றி முன்கூட்டியே அறிந்து முன்னெச்சரிக்கையாக தயாராக வேண்டி இருந்தது.
தடுப்பூசியில் முக்கிய பங்கு
இதனால் ஓட்டுச்சாவடி ஊழியர்கள், பாதுகாப்பு படையினருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்தோம். நாங்கள் சுகாதாரச் செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் தொடர்ந்து ஆலோசித்தோம். கொரோனா பரவலை வாரந்தோறும் உன்னிப்பாக கவனித்தோம். ஐந்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்த மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினோம். இதனால் வாக்காளர்களுக்கு முதல் அல்லது இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது. குறிப்பாக உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகரிக்க தேர்தல் ஆணையமும் ஒரு காரணம். மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என தலைமை செயலாளர்களிடம் கேட்டு கொண்டோம். மேலும் கட்சியினர் பிரசாரம் செய்யவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன்மூலம் டிஜிட்டல் பிரசாரம் முக்கியத்துவம் பெற்றது'' என்றார்.