புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழுடன் 'ஆதார் அட்டை'.. விரைவில் அமலுக்கு வருகிறது
டெல்லி: புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழுடன் ஆதார் அட்டை வழங்கப்படும் நடைமுறை விரைவில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் என எதை பெற வேண்டும் என்றாலும் தற்போது ஆதார் எண்ணே முதன்மையாக கேட்கப்படுகிறது.
வங்கி கணக்கு துவங்குவது முதல் சிலிண்டர் புக் செய்வது வரை அனைத்திற்கும் ஆதார் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஆதார் எண்களே முக்கிய பங்கு
பயனாளிகளுக்கு நேரடியாக வங்கி கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும் திட்டத்திற்கு ஆதார் முக்கிய பங்காற்றியது. போலிகளை ஒழிப்பதில் ஆதார் எண்கள் முக்கிய பங்கு வகிப்பதால் இப்போது எந்த ஒரு நலத்திட்டத்திற்கும் ஆதார் எண்களே கேட்கப்படுகிறது. மாநில அரசுகளின் 650 க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் 315 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதார் எண்களே பயன்படுத்தப்படுவதாக தரவுகள் கூறுகின்றன.

பிறப்பு சான்றிதழோடு ஆதார் எண்
மக்களின் வசதிக்காக ஆதார் பதிவு உள்ளிட்ட நடைமுறைகளில் அவ்வப்போது மாற்றங்களையும் ஆதார் ஆணையம் கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழோடு ஆதார் எண்ணையும் வழங்கும் திட்டம் விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்த ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தற்போது 16 மாநிலங்களில் இந்த வசதி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

'பால் ஆதார்' அட்டை
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் எண் பெறும் நடைமுறையை எளிதாக்கும் வகையில் இந்த புதிய வசதி இருக்கும் என்று ஆதார் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை. முக புகைப்படம் மட்டுமே வைத்து இந்த ஆதார் எண்கள் வழங்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டை 'பால் ஆதார்' என்று அழைக்கப்படுகிறது.

5 வயது அடைந்த பிறகு அப்டேட்..
இதை பெறுவதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மட்டும் இருந்தால் போதுமானது. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையில் ஆதார் எண் தொடர்பான விவரங்கள் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் வரும். இந்த ஆதார் அடையாள அட்டையை குழந்தை 5 வயது அடைந்த பிறகு அப்டேட் செய்ய வேண்டும். அதாவது குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்கள் கொடுத்து அப்டேட் செய்யப்பட வேண்டும்.

134 கோடி பேருக்கு
ஒரு வேளை குழந்தைக்கு 5 வயது வரை ஆதார் எடுக்கப்படவில்லை எனில், புதியதாக பயோமெட்ரிக் முறையில் ஆதார் கார்டுக்கு அப்ளை செய்யப்பட வேண்டும். இதே போல 15 வயதிலும் குழந்தையின் ஆதார் அப்டேட் செய்யப்பட வேண்டும். நமது நாட்டில் இதுவரை 134 கோடி ஆதார்கள் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சிறார்களின் எண்ணிக்கை மட்டும் 4 கோடி
கடந்த ஆண்டில் அப்டேட் மற்றும் புதிதாக பதிவு செய்யப்பட்ட ஆதார் கார்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 கோடியாக இருந்தது. இவற்றில் புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் எண்ணிக்கை மட்டும் 4 கோடியாகும். புதிதாக ஆதார் எண்கள் பெற்ற வயது வந்த பெரியவர்கள் எண்ணிக்கை வெறும் 30 லட்சம் மட்டுமே ஆகும்.












Click it and Unblock the Notifications