"ப்ளீஸ் கீழ வாங்க சார்.." சீட் கிடைக்காததால் மின் கம்பத்தில் ஏறிய ஆம் ஆத்மி நிர்வாகி! கெஞ்சிய போலீஸ்
டெல்லி: தலைநகர் டெல்லியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குப் பல சுவாரசிய காட்சிகள் அரங்கேறத் தொடங்கி உள்ளன.
தேர்தல் என்றாலே அனைத்து கட்சிகளுக்கும் சந்தோஷம் வந்துவிடும். ஏனென்றால் மக்களிடையே ஒரு கட்சிக்கு எந்தளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டத் தேர்தலே அளவுகோலாக உள்ளது.
இதனால் தேர்தலில் போட்டியிடப் போகும் ஒவ்வொரு வேட்பாளரையும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள். அதேபோல தேர்தல் காலகட்டத்தில் பல காமெடி நிகழ்வுகளும் கூட எப்போதுமே நடக்கும்.

டெல்லி
அப்படியொரு காமெடி தான் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தல் வரும் டிச. 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி உள்ளது. டெல்லி மாநிலத்தில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலிலும் பெரியளவில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் ஆம் ஆத்மி களமிறங்குகிறது.

ஆம் ஆத்மி
இதற்காக எல்லா பகுதிகளிலும் அக்கட்சியின் நிர்வாகிகள் இறங்கி வேலை செய்து வருகின்றனர். அதேபோல வேட்பாளர்களும் மிகக் கவனமாகத் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தனக்கு சீட் கிடைக்காததால் டெல்லி முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் சீட் இல்லை என தெரிந்த உடன் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலை முயற்சி
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு இரண்டாம் கட்டமாக 117 பெயர்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இதில் ஹசீப்-உல்-ஹசன் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், இன்று சாஸ்திரி பார்க் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பரபரப்பு
அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு அளித்த தகவலின்படி, தீயணைப்புப் படையினரும் போலீசாரும் அங்குத் திரண்டனர். அவரை சமாதானம் செய்து கிழே அழைத்து வரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இது ஆம் ஆத்மி கட்சிக்குக் கெட்ட பெயரை வாங்கி தரும் என்று அக்கட்சியினர் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி தேர்தல்
டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு ஆம் ஆத்மி பக்காவாக ரெடியாகி வருகிறது. 250 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலுக்குக் கடந்த வெள்ளிக்கிழமை முதற்கட்டமாக 134 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. மறுநாளே, சனிக்கிழமை, 117 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி காட்டினார்.

நேரடி பட்டி
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் களமிறங்கினாலும் கூட இதில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த 15 ஆண்டுகளாகவே டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் கைகளே ஓங்கி உள்ளன. இருப்பினும், டெல்லியில் உட்கட்டமைப்பை மேம்படுத்த பாஜக தவறிவிட்டதாகவும் 15 ஆண்டுகளில் செய்த ஒரு விஷயத்தைக் காட்ட முடியுமா என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விட்டுள்ளார். டெல்லி மாநகராட்சி தேர்தல் வரும் டிசம்பர் 4இல் நடைபெறும் நிலையில், டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.












Click it and Unblock the Notifications