முன்கூட்டியே டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெறாமல் போனால் அடுத்த முதல்வர்? அரவிந்த் கெஜ்ரிவால் பதில்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலை மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுடன் நடத்த வலியுறுத்துகிறோம்; அப்படி டெல்லி சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படாமல் போனால் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து அறிவிப்போம் என முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி முதல்வராக நிச்சயம் மணீஷ் சிசோடியா பதவியேற்கமாட்டார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனில் விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசினார். அப்போது, டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அடுத்த 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

மேலும் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற வேண்டும்; அதை முன்கூட்டியே அதாவது மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுடன் நடத்த வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
ஆங்கிலேய ஆட்சியை விட மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிதான் கொடூரமாக நடந்து கொள்கிறது; ஆம் ஆத்மி கட்சியை உடைத்து டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக கனவு கண்டது. அந்த கனவு நிறைவேறாமல் போய்விட்டது. ஆம் ஆத்மியை உடைக்க முடியாத பாஜக, என்னுடைய தைரியத்தை சிதைக்க என்னை சிறைக்கு அனுப்பியது என்றும் குற்றம்சாட்டினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அத்துடன் ஒருவேளை டெல்லி சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படாமல் போனால் யார் முதல்வர் என்பதை அறிவிப்போம். அதேநேரத்தில் பாஜக அரசால் பழிவாங்கப்பட்டு சிறையில் இருந்து விடுதலையான மணீஷ் சிசோடியா முதல்வராக்கப்படமாட்டார். நாங்கள் மக்களிடம் சென்று நீதி கேட்டு மக்கள் தரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.
தாம் மணீஷ் சிசோடியாவை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதாகவும் அவரும் தம்மைப் போல இந்த சூழ்நிலையில் முதல்வர் பதவியை ஏற்க விரும்பவில்லை; மக்கள் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் முடிவெடுப்போம் என கூறிவிட்டார். ஆகையால் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவர்தான் முதல்வராக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் விவரித்தார்.












Click it and Unblock the Notifications