'வார் ரூம்கள்' தேவை.. 3 மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. மீண்டும் ஊரடங்கு? மத்திய அரசு பரபர கடிதம்
டெல்லி: ஓமிக்ரான் உருமாறிய கொரோனா டெல்டா கொரோனாவை விட 3 மடங்கு வேகமாகப் பரவுவதாக எச்சரித்துள்ள மத்திய அரசு, இதைக் கட்டுப்படுத்த வார் ரூம்களை ஏற்படுத்த வேண்டும் என மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது.
Recommended Video
உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வந்தது. வேக்சின் பணிகளும் ஒரு புறம் வேகமாக நடைபெற, கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாகவே அனைவரும் கருதினர்.
இந்தச் சூழலில் தான் கடந்த நவ.25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாறிய வகை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.
ஓமிக்ரான் பாதித்த அத்தனை பேருக்கும்
வேகமாக பரவும் ஓமிக்ரான்
ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரசை உலக சுகாதார அமைப்பு, கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இது புதிய உருமாறிய வைரஸ் என்பதால் இது குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கொரோனா வேகமாகப் பரவும் ஆற்றல் கொண்டதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரம் இது தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றே தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் முதற்கட்டமாக தெரிவித்திருந்தனர்.
ஓமிக்ரான் கேஸ்கள்
பல்வேறு நாடுகளுக்கும் பரவிய இந்த ஓமிக்ரான், இம்மாத தொடக்கத்தில் இந்தியாவுக்குள் புகுந்தது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் முதலில் வைரஸ் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த ஓமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை 200க்கு மேல் அதிகரித்துள்ளது.
3 மடங்கு வேகம்
இந்தச் சூழலில் ஓமிக்ரான் கொரோனா தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதியுள்ளது. ஓமிக்ரான் கொரோனா டெல்டாவை விட மூன்று மடங்கு வேகமாகப் பரவுகிறது என்றும் ஓமிக்ரான் கொரோனை கட்டுப்படுத்த வார் ரூம்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தீவிர கொரோனா பரிசோதனை, இரவு ஊரடங்கு உள்ளிட்ட தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எப்போது நடவடிக்கை
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எழுதியுள்ள இந்தக் கடிதத்தில், "உள்ளூரில் இருக்கும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை வேண்டும். ஒரு வாரத்தில் பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதம் மேல் இருந்தால் அல்லது ஆக்ஸிஜன் & ஐசியு படுக்கைகளில் 40 சதவீதம் மேல் நிரம்பினால் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கலாம். இந்த நிலையை அடையும் முன்னரே மாநில அரசுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்க வேண்டும்.
டெல்டா முடியவில்லை
ஓமிக்ரான் தவிர, டெல்டா உருமாறிய கொரோனாவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னும் உள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் தக்க நேரத்தில் மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விரைவாக முடிவு எடுக்க வசதியாக மாவட்ட ரீதியில் முடிவுகளை எடுக்க நடவடிக்கைகள் தேவை. சோதனை மற்றும் கண்காணிப்பு முறைகளின் ஒரு பகுதியாக, வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தலாம். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியலாம்.
சோதனை
ஒரே இடத்தில் அதிகப்படியான நபர்களுக்கு கொரோனா உறுதியாகும்பட்சத்தில் அவர்களின் மாதிரிகளை உடனடியாக மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்காக INSACOG ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை அடைய அனைத்து மாநிலங்களும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவசரக்கால நிதியைப் பயன்படுத்தி படுக்கைகள், ஆம்புலன்ஸ்கள், ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.