வாங்க பக்கோடா, டீ விற்று வாழ்வோம்.. பொறியாளர் தின வாழ்த்து கூறிய மோடியை விமர்சித்த பிரகாஷ் ராஜ்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பொறியாளர் தினத்துக்கு இன்று வாழ்த்து தெரிவித்த நிலையில் அவரை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். பொறியியல் துறை சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வரை பக்கோடா, டீ விற்று வாழலாம் என பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவின் முதல் கட்டட பொறியாளர் என போற்றப்படும் சர் எம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கர்நாடகத்தை சேர்ந்த சர் எம் விஸ்வேஸ்வரய்யா 1860 செப்டம்பர் 15ல் பிறந்தார். அதன்படி இந்தியாவில் ஆண்டுதோறும் பொறியாளர்கள் அல்லது என்ஜினீயர் தினம் செப்டம்பர் 15ல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாரத ரத்னா விருது
இவர் இந்திய பொறியியலின் தந்தை என அழைக்கப்பட்டு வருகிறார். கர்நாடகத்தில் காவிரிக்கு குறுக்கே கேஆர்எஸ் அணையை கட்டியதில் தலைமை பொறியாளராக இவர் இருந்தார். மேலும் டாடா ஸ்டீல் குழுமத்தின் இயக்குனர் குழுவிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும் பொறியில் துறையில் பல வியத்தகு சாதனைகளை செய்துள்ளார். இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி வாழ்த்து
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பொறியாளர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டரில் சர் எம் விஸ்வேஸ்வரய்யா பற்றி அவர் மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசியதன் ஆடியோவை பகிர்ந்துள்ளார்.

மோடி கூறியது என்ன?
மேலும், ‛‛பொறியாளர் தினத்தில் சர் எம் விஸ்வேஸ்வரய்யாவின் சிறப்பான பங்களிப்பை நினைவுக்கூறுகிறேன். அவர் நாட்டின் பொறியாளர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இதுதொடர்பாக முந்தைய மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறேன். பொறியாளர் தினத்தில் அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். நாட்டை கட்டியெழுப்புவதில் திறமையான பொறியாளர்களை கொண்டிருப்பதன் மூலம் நம் நாடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. மேலும் பொறியியல் கல்லூரிகளை உருவாக்குவது உள்பட பொறியியல் படிப்பிற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு செயல்பட்டு வருகிறது'' என தெரிவித்து இருந்தார்.

பிரகாஷ் ராஜ் விமர்சனம்
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் பொறியாளர் தின வாழ்த்துக்கு பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛அதுவரை பக்கோடா அல்லது சாய்(டீ) விற்று வாழலாம்'' என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில் பொறியியல் கல்லூரிகளை உருவாக்குவது உள்பட பொறியியல் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறிய நிலையில் மேம்படுத்தும் வரை பக்கோடா அல்ல டீ விற்று வாழலாம் எனக்கூறி பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications