அற்பம்.. தகுதியே இல்லை.. ஓபிஎஸ் வழக்கில் எடப்பாடி சுப்ரீம்கோர்ட்டில் பதில் மனு.. விசாரணை எப்போது?
டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் வரும் 21ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் ஓ பன்னீர் செல்வத்தின் மனு மிகவும் அற்பமானது. கட்சி விதிகளை மீறிய ஓ பன்னீர் செல்வம் நிவாரணம் பெற தகுதியற்றவர் என எடப்பாடி பழனிச்சாமி மனுவில் கூறியுள்ளார்.
அதோடு மட்டுமின்றி ஓ பன்னீர் செல்வம் தொடர்பாக இன்னும் பல விஷயங்களை எடப்பாடி பழனிச்சாமி தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக விவகாரம்
அதிமுகவில் இரட்டை தலைமை இருந்து வந்தது. ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வந்தனர். இதற்கிடையே தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து அதிமுகவில் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டன.

பொதுக்குழு பிரச்சனை
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இது ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு சாதமாக அமைந்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‛‛எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இந்த வேளையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அவசரம் காட்டுவது ஏன்?'' என கேள்வி கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடியும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டது.

எடப்பாடி சார்பில் பதில் மனு
இதையடுத்து வழக்கு தொடர்பாக விரிவான பதில் அளிக்க வேண்டும் என அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் வழக்கு விசாரணை நவம்பர் 21ல் மீண்டும் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது. இதனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அற்பமான மனு
அதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்ய வேண்டும். அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் எனக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் ஓ பன்னீர் செல்வத்தின் மனு அற்பமானது. அவர் கட்சியின் விதிகளை மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் எந்த நிவாரணமும் பெற தகுதியற்றவர்.

பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம்
இந்த ஒற்றைத் தலைமை என்ற தொண்டர்களின் விருப்பமாகும். தொண்டர்களின் விருப்பம், கட்சி நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய முடிவு எடுக்க கட்சி பொதுக்குழுவுக்கு முழுஅதிகாரம் உள்ளது. பொதுக்குழு தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனால் பொதுக்குழு முடிவு தான் இறுதியானது. இதில் சட்டவிதி மீறல் எதுவும் இல்லை'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications