அசோக் கெலாட் மீது அதிருப்தி.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாவின் கவனத்தை பெறும் 3 தலைவர்கள்!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தேர்வு செய்ய சோனியா காந்தி முடிவு செய்தார். ஆனால் அசோக் கெலாட் ராஜஸ்தான் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதால் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளார். இந்நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்களான 3 பேரின் மீது சோனியா காந்தியின் கவனம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடவில்லை.

காங்கிரஸ் தலைவர் பதவி
மாறாக சோனியா காந்தி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உத்தரவிட்டார். மேலும் திருவனந்தபுரம் எம்பி சசீதரூரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இதில் அசோக் கெலாட்டுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதால் அவர் வெற்றி பெறுவார் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைப்பதால் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு அசோக் கெலாட் தள்ளப்பட்டார்.

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்
காங்கிரஸில் தற்போது ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறை உள்ளது. இதனால் ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து அசோக் கெலாட்டை நீக்கவிட்டு சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. ஆனால் அசோக் கெலாட் அதனை விரும்பவில்லை. ஒரே நேரத்தில் இருபதவிகளையும் வகிக்க விருப்பம் தெரிவித்தார். இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக நியமிக்க அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சச்சின் பைலட்டை முதல்வராக நியமித்தால் ராஜினாமா செய்வதாகவும் 90க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் பின்னணியில் அசோக் கெலாட் இருப்பதால் அவர் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

அசோக் கெலாட் மீது சோனியாவுக்கு பயம்
மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை விட அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை தான் விரும்புகிறார். இதனால் அசோக் கெலாட் மீதான நம்பிக்கையை சோனியா காந்தி இழந்துள்ளார். தனது விசுவாசி என நம்பியே சோனியா காந்தி அவரை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வலியுறுத்திய நிலையில் அவரது இத்தகைய நடவடிக்கை என்பது சோனியா காந்தியை கடும் கோபத்துக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேறு மூத்த தலைவர்களை நியமிக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது. ஒருவேளை அசோக் கெலாட் தலைவர் பதவியை பெற்ற பிறகு தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் செயல்படலாம் என நினைக்கிறது.

பிற தலைவர்கள் பெயர்கள்
இதனால் தான் மூத்த தலைவர்களை போட்டியிட வைக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. அதன்படி கேசி வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, கமல்நாத், திக்விஜயசிங், முகுல் வாஸ்னிக், சுஷில் குமார் ஷிண்டே உள்ளிட்டவர்களை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வைக்கலாம் என மேலிடம் நினைக்கிறது. இதில் முன்னணியில் கேசி வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் திக்விஜய் சிங் வரும் 30ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications