"இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம்.. இதைச் செய்யுங்கள் போதும்.." மக்களவையில் பொங்கிய ஒவைசி
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு ஓவைசியின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவர் மக்களவையில் பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் 10ஆம் தேதி தொடங்கி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. உ.பி-இல் அதிகபட்சமாக 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் இப்போது ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் போட்டி உள்ளது. இது தவிரப் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ளன.

உ.பி தேர்தல்
ஹைதராபாத் எம்பி ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே மற்ற சட்டசபைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார். கடந்த 2020இல் பீகாரில் நடந்த தேர்தலில் கூட அவர் போட்டியிட்டிருந்தார். இந்தச் சூழலில் உத்தரப் பிரதேசத்திலும் இஸ்லாமியர்களின் மக்கள்தொகையும் கணிசமாக உள்ள நிலையில், அங்கு சுமார் 100 இடங்களில் அவரது மஜ்லிஸ் கட்சி போட்டியிடும் என அறிவித்தார்,

துப்பாக்கிச் சூடு
இதற்காக நேற்று அவர் மீரட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். அதை முடித்துக் கொண்டு அவர் டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, சாஜர்சி சுங்கச்சாவடி அருகே அவரது வாகனத்தை நோக்கி சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. 2 குண்டுகள் அவரது காரிலும் மூன்றாவதுக் குண்டு அவரது கார் டயரிலும் பாய்ந்ததுள்ளது

ஒருவர் கைது
உத்தரப் பிரதேசத்தில் தேர்தலுக்கு சில நாட்கள் உள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெறும் முன், இருவர் தனது காரை நோட்டமிட்டதாகவும் ஓவைசி தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உ.பி. போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே ஓவைசிக்கு நாட்டிலேயே 2ஆவது மிக உயர்ந்த 'இசட்' பிரிவு பாதுகாப்பை வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

உபா சட்டம்
இருப்பினும், 'இசட்' பிரிவு பாதுகாப்பை நிராகரித்துள்ள ஓவைசி இந்தச் சம்பவம் தொடர்பாக மக்களவையிலும் பேசினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "மக்களின் வாக்குகளை நம்பாமல் துப்பாக்கி தான் அனைத்துக்கும் தீர்வு என நம்பியவர்கள் யார்? அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாத அளவுக்குத் தீவிரவாதிகளாக உள்ள இவர்கள் யார். என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் மீது ஏன் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. நமது நாட்டில் இப்போது வெறுப்புகளை பரப்பும் நபர்கள் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை. மாறாகச் சாதாரண கிரிக்கெட் போட்டிக்குக் கருத்து தெரிவிப்பவர்கள் மீதெல்லாம் உபா சட்டம் பாய்கிறது.

வெறுப்பு பேச்சு
இப்போது இங்கு இரண்டு வகையான இந்தியாக்கள் உள்ளன. ஒன்று அன்பை அதன் செல்வமாகக் கருதுகிறது, மற்றொன்று வெறுப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நான் வெறும் ஆறு அடி தூரத்தில் தோட்டாக்களை பார்த்தேன். நாளை இப்படி என்னால் பார்க்க முடியாமல் போகலாம். சமீப வாரங்களில் ஹரித்வார், ராய்ப்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சிகளில் என்னைப் பற்றி வெறுப்பைப் பரப்பும் பேச்சுகள் நிகழ்த்தப்பட்டன. மிகவும் அதிர்ச்சிகரமான இந்த பேச்சுக்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இசட் பிரிவு வேண்டாம்
எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம். 1994 முதல் நான் அரசியலில் இருக்கிறேன். சுதந்திர மனிதனாக வாழ விரும்புகிறேன். நான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் எனது குரலை நான் தொடர்ந்து எழுப்ப வேண்டும். அப்படிச் செய்யும்போது சுடப்பட்டால் அது பரவாயில்லை. மக்களை விட ஒவைசியின் உயிர் முக்கியமில்லை. மத நல்லிணக்கத்திற்கு எதிராக வெறுப்பு பரப்பும் நிகழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications