குடியரசு தினத்திற்கு பிறகு.. ஏர் இந்தியா நிறுவனத்தை கைமாற்ற திட்டம்.. டாடா வசம் செல்கிறது!
டெல்லி: குடியரசு தினத்துக்கு பிறகு டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவிருக்கிறது.
இந்தியாவின் ஒரே பொதுத்துறை விமான சேவை நிறுவனமாக ஏர் இந்தியா' நிறுவனம் செயலபட்டு வந்தது. தனியார் விமான நிறுவனங்களின் வருகையால் ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது.
சமீபகாலமாக ஏர் இந்தியாவின் நஷ்டம் ரூ.70,000 கோடியை நெருங்கியது. இதனால் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் ஏலத்துக்கு வந்தது.
அதிகரிக்கும் கொரோனா: குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு - ஆளுநர் மாளிகை அறிவிப்பு
ஏர் இந்தியா
ஒரு வருடமாக ஏர் இந்தியா விற்பனை சாத்தியமாகாமல் இருந்தது. இந்தநிலையில், டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஆர்வம் தெரிவித்தது. மத்திய அமைச்சர்கள் குழு நடத்திய ஆலோசனை நடத்தப்பட்டது. அதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் விற்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்டது மத்திய அரசு.
டாடா
தொடர் நஷ்டத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து கடந்த ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்தின் கைகளுக்கு வந்தது. 1932-ம் ஆண்டு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா', 1953-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் விமான சேவை என்ற பெருமையோடு ஏர் இந்தியா நிறுவனம் செயல்பட்டது.
விற்பனை
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் விற்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளிட்ட ரூ.14, 718 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் அரசின் வசமே இருக்கும். மேலும் ஏர் இந்தியாவில் பணியாற்றுவோர் மற்றும் ஓய்வுபெற்றோரின் நலன்கள் காக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஒப்படைப்பு
குடியரசு தினத்துக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய கையிருப்பு மற்றும் நிதி அறிக்கை குறித்து டாடா நிறுவனத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதைடாடா சன்ஸ் பரிசீலனை செய்து சொல்ல வேண்டும். அதன்பிறகு, வரும் வியாழக்கிழமைக்குள் ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.