அதிமுகவின் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல்.. புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்திய ரவீந்திரநாத்
Recommended Video
டெல்லி: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஏழைகளுக்கான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என - புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை வரவேற்கும் முறையின் மீது ரவீந்திரநாத் எம்பி பேசினார். அதிமுகவினர் பொதுவாக ஜெயலலிதாவை புகழ்ந்துவிட்டு பேசுவார்கள். அதனை அப்படியே ரவீந்திரநாத்தும் கடைபிடித்து வருகிறார்.
பிரதமர் நரேந்திரமோடி மக்களவை புதிய சபாநாயகராக ஓம் பிர்லாவை முன்மொழிந்தார். இதற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், உள்பட அனைத்து கட்சிகளுமே ஆதரித்து முன்மொழிந்தன. இதையடுத்து 17வது மக்களவைக்கு புதிய சபாநாயகராக பாஜக எம்பி ஒம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஓம பிர்லாவை வாழ்த்தி லோக்சபா உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடி சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்தி பேசுகையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கடசி உறுப்பினர்களுக்கு இடையே ஓம் பிர்லா பாலமாக இருப்பார் என புகழ்ந்தார். மேலும் பொதுவாழ்வில் பல ஆண்டுகளாக இருந்தவர் ஓம் பிர்லா என்றும், அவர் ஓய்வின்றி எப்பொழுதும் மக்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் முன்மொழிந்தார். அப்போது அவர் சபாநாயகர் ஓம் பிர்லாவை வித்தியாசமான முறையில் வரவேற்று பேசி உள்ளார். அதுவும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட வேண்டும் என ரவீந்திரநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், "ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என அண்ணா கூறினார். ஏழைக்களுக்காக தன் வாழ்வையே அர்பணித்தவர் எம்ஜிஆர்.ஏழைகளுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா, அவர்களைபோல நீங்களும் ஏழைகளுக்கான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" இவ்வாறு கூறினார்.
எம்ஜிஆர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்று சொல்லிதான் நேற்று ரவீந்திரநாத் எம்பியாக பதவியேற்றார். இப்போதும் எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்துதான் சபாநாயகரை வாழ்த்தி உள்ளார். எனவே வரும் காலங்களிலும் நாடாளுமன்றத்தில் ரவீந்திராத் எம்ஜிஆர், ஜெயலலிதா புகழை பாடித்தான் ஒவ்வொரு பேச்சையும் ஆரம்பிப்பார் என தெரிகிறது. ஏனெனில் முன்பு இருந்த அதிமுகவின் 37 எம்பிக்களுமே நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவை புகழ்ந்துவிட்டு பேசுவதை மரபாகவே வைத்திருந்தார்கள். அதை ரவீந்திரநாத் தொடருவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications