பெண் பயணி மீது சிறுநீர் கழித்த பயணி.. ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் ஃபைன்.. பைலட் 3 மாதம் சஸ்பெண்ட்
டெல்லி: சக பெண் பயணி மீது போதை ஆசாமி சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக எந்த உதவியும் செய்யாதது; சிறுநீர் கழித்த நபரை எந்த நடவடிக்கைக்கும் உட்படுத்தாமல் வெளியேறச் செய்தது போன்ற காரணங்களுக்ககாக சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானியின் உரிமத்தை 3 மாதம் சஸ்பெண்ட் செய்தும் டிஜிசிஏ உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், இனி இதுபோன்ற பயணிகளின் ஒழுங்கீனமான செயல்களை அலட்சியப்படுத்தவும், அனுமதிக்கவும் கூடாது என்றும் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

பூதாகரமாக மாறிய விவகாரம்
ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது போதை ஆசாமி சங்கர் மிஸ்ரா சிறுநீர் கழித்த விவகாரத்தில் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வந்த விமானத்தில்தான் இந்த அருவருக்கத்தக்க சம்பவம் நடந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதால் அமெரிக்க நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்த அவரது வேலையும் பறிபோனது. மேலும், 30 நாட்களுக்கு அவர் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டது.

"எனது சிறுநீர் அல்ல"
இதனிடையே, தான் செய்த தவறுக்காக காவல் நிலையத்தில் புகார் தந்துவிடாதீர்கள் என அழுதுபுரண்டு மன்னிப்பு கேட்ட சங்கர் மிஸ்ரா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டதும் 'அந்தர் பல்டி' அடித்தார். அதாவது, அந்தப் பெண்ணின் மீது தான் சிறுநீர் கழிக்கவில்லை என்றும், அவரே அவர் மீது சிறுநீர் கழித்துக் கொண்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சங்கர் மிஸ்ராவின் இந்த வாக்குமூலமும் ஊடகங்களில் வெளியாகி விமர்சனங்களுக்கு வித்திட்டன.

ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்
இது ஒருபுறம் இருக்க, விமானத்தில் நடைபெற்ற அந்த விரும்பத்தகாத சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாளர், அந்நிறுவனத்தின் விமான சேவை இயக்குநர், சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானிகள் மற்றும் குழு உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர்கள் சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை பரிசீலித்த டிஜிசிஏ, ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

3 லட்சம் அபராதம்.. சஸ்பெண்ட்..
அதேபோல, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவை பிரிவு இயக்குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட விமானத்தில் பொறுப்பு விமானியின் உரிமத்தை 3 மாதங்கள் சஸ்பெண்ட் செய்தும் டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமானப் பயணத்தின் போது பயணிகளின் விரும்பத்தகாத நடவடிக்கைகளை யாரிடம் தெரிவிப்பது, பின்னர் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதை உறுதி செய்வது போன்ற வழிமுறைகளை வகுத்து பின்பற்றுவோம்" எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications