'ஏர் இந்தியா' சர்வர்கள் ஹேக்.. 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிவு!
டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் தரவுகள் ஹேக் செய்யப்பட்டதால் அதில் பயணம் செய்த 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிந்துளளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் பயணிகள் விவரங்கள் சேர்த்து வைக்கும் இனையதளத்தை கடந்த பிப்ரவரி மாதம் ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். இந்த சைபர் பாதுகாப்பு தாக்குதலில் பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணம் செய்த 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட 2011 ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் 2021 பிப்ரவரி 3-ம் தேதி வரையிலான பத்து வருட வாடிக்கையாளர் தரவு கசிந்துள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை இ-மெயில் மூலம் ஏர் இந்தியா அனுப்பியுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பயணிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. கிரெடிட் கார்டு தரவு திருடப்பட்டதாக நிறுவனம் கூறியிருந்தாலும், சி.வி.வி அல்லது சி.வி.சி எண்கள் திருடப்படவில்லை என்று கூறுகிறது. சி.வி.வி எண் அட்டையின் பின்புறத்தில் உள்ள 3 இலக்க எண்ணாக இது உள்ளது. ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு இந்த எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
தகவல்கள் திருடப்பட்டுள்ளதால் ஆன்லைன் கடவுச்சொல்லை மாற்ற பயணிகளை ஊக்குவிப்போம். பயணிகளின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எங்களுக்கு மிக முக்கியமானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications