தேசிய அளவில் "சம்பவம்!" ஒரே மேடையில் திரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்.. அப்போ நிதிஷ் சொன்னதை பாருங்க
டெல்லி: ஹரியானாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் பங்கேற்றுள்ளது கவனத்தை ஈர்த்து உள்ளது.
நமது நாட்டில் அடுத்த மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டில் தான் நடைபெறுகிறது. தேர்தலுக்குப் பல மாதங்கள் இருந்தாலும் கூட இப்போதே அரசியல் கட்சிகள் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக ஒரு பக்கம் திட்டம் போட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளது.

எதிர்க்கட்சிகள்
அதேபோல மறுபுறம் எதிர்க்கட்சிகளும் தங்கள் வேலைகளைத் தொடங்கிவிட்டன. காங்கிரஸின் ராகுல் காந்தி நாடு முழுக்க கட்சியை வலுப்படுத்தப் பாத யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இது அக்கட்சி தொண்டர்களுக்குப் பெரிய உத்வேகத்தைக் கொடுத்து உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். இது தவிர அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வரும் முயற்சிகளும் தனியாக ஒரு பக்கம் நடந்து வருகிறது.

நிதிஷ்குமார்
இதற்கான முயற்சிகளை பல்வேறு தலைவர்களும் தீவிரமாக முன்னெடுத்து உள்ளனர். குறிப்பாகப் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சமீபத்தில் தான் டெல்லியில் பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து இருந்தார். பீகாரில் பாஜக கூட்டணியில் ஆட்சி அமைத்து இருந்த நிதிஷ்குமார், சமீபத்தில் தான் பாஜகவில் இருந்து விலகி இருந்தார். அவர் ஆர்ஜேடி மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியை அமைத்தார். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சி கூட்டணி
கடந்த மக்களவை தேர்தல்களில் தேசிய அளவில் வலுவான ஒரு கூட்டணி அமையாததே ஆளும் பாஜக பெரியளவில் வெல்ல முக்கிய காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதே தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதால் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை இவர்கள் உருவாக்க வேண்டும் என்பதாலேயே பல எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த முயற்சியை முன்னெடுத்து உள்ளனர்.

ஒரே மேடையில்
இதனிடையே ஹரியானாவின் பதேஹாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பல முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியத் தேசிய லோக் தளம் சார்பில் நடந்த இந்த பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சிபிஎம் கட்சியில் இருந்து சீதாராம் யெச்சூரி மற்றும் சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் உட்பட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய தலைவர்
முன்னாள் துணைப் பிரதமரும், ஐஎன்எல்டி நிறுவனருமான தேவி லாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் பேசிய ஜேடியு தலைவர் கே.சி. தியாகி, "காங்கிரஸில் இருந்து 8 முன்னாள் முதல்வர்கள் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், தைரியமாக டெல்லியைப் பீகார் முதல்வர் எதிர்த்து உள்ளார். அமலாக்கத்துறை, வருமான வரித் துறை என எதைக் கண்டும் நிதிஷ்குமாருக்குப் பயம் இல்லை" என்றார்.

நிதிஷ்குமார்
இந்த கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார் வரும் 2024 மக்களவை தேர்தலில் தான் பிரதமர் வேட்பாளர் இல்லை என்று தெளிவுபடுத்தினார். மேலும், மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டால் மட்டுமே 2024இல் பாஜகவைத் தோற்கடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த பேரணியில் பீகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வர வேண்டும் எனக் கூறப்படும் நிலையில், இந்த மீட்டிங் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications