சீன பதற்றத்திற்கு நடுவே.. காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த அமெரிக்க கடற்படை கப்பல்! ஓ இது தான் காரணமா
டெல்லி: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மறுபுறம் அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான தளவாட கப்பல் தமிழகம் வந்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அடுத்தடுத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதை உலக நாடுகளும் உற்று நோக்கி வருகின்றன.
ஏற்கனவே, ஒரு புறம் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரே பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இது சர்வதேச பொருளாதாரத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சீனா
கடந்த வாரம் தான் அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்று இருந்தார். தைவானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டு இருந்தார். தைவான் தனி நாடு இல்லை. அது தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறி வரும் சீனாவுக்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தைவான் வான் பகுதியில் அத்துமீறி நுழைந்து சீன விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டது. அதேபோல சீனாவுக்குச் சொந்தமான கப்பலும் தைவானுக்கு மிக அருகே நிறுத்தப்பட்டு உள்ளது.

இலங்கை
இது ஒருபுறம் இருக்கச் சீனாவுக்குச் சொந்தமான கப்பலான யுவான் வாங் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர உள்ளதாகத் தகவல் வெளியானது. இதை ஆராய்ச்சி கப்பல் என்றே கூறப்பட்டது. இருப்பினும், இந்தக் கப்பலால் அந்தப்பகுதியில் இருக்கும் ஏவுகணைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும். இந்தியாவை உளவு பார்க்கும் ஒரு முயற்சியாகவே சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

வேண்டுகோள்
இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த போது இந்தியா மட்டுமே பக்க பலமாக நின்று உதவியது. இதை ரணில் விக்ரமசிங்கவே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். இந்தச் சூழலில் சீனாவின் யுவான் வாங் இந்தியாவை உளவு பார்க்கக் கூடும் என்பதால் இந்தியா இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தது. இந்தச் சூழலில் அந்த கப்பலின் வருகையைக் காலவரையின்றி தாமதப்படுத்துமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டு உள்ளது.

அமெரிக்கக் கடற்படை கப்பல்
இப்படி சீனாவால் அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவங்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்காவுக்குச் சொந்தமான சார்லஸ் ட்ரூ என்ற கப்பல் தமிழகத்திற்கு வந்துள்ளது. அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இந்த சார்லஸ் ட்ரூ கப்பல் 2000களின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாகும். இது கடந்த 2010 ஜூலை மாதம் அமெரிக்கக் கடற்படையும் ஒப்படைக்கப்பட்டது.

முக்கியம்
அதைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதல் இந்த கப்பல் அமெரிக்கா ராணுவத்திற்குச் சேவையாற்றி வருகிறது. இந்த கப்பல் பெரும்பாலும் பாசிபிக் கடல் பகுதியில் தான் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வரும். கடந்த காலங்களில் கடலில் சிக்கித் தவித்த பல மீனவர்களும் கூட இந்த கப்பல் மீட்டுள்ளது.

காட்டுப்பள்ளி துறைமுகம்
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இந்த சார்லஸ் ட்ரூ என்ற ராணுவத் தளவாட கப்பல் இப்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. இந்தக் கப்பல் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வந்துள்ளது. அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல் அங்கு தான் இப்போது நிறுத்தப்பட்டு உள்ளது. பழுது நீக்கம் செய்வதற்காகவே இந்தக் கப்பல் காட்டுப்பள்ளியில் உள்ள எல் & டி துறைமுகத்திற்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications