கொரோனா.. விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.. பட்டியலிட்ட மத்திய சுகாதாரத்துறை
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரானின் உருமாறிய பிஎப் 7 வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
சீனாவில் பரவி வரும் ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.
அதன்படி விமான நிலையங்களில் ரேண்டமாக 2 சதவீத பயணிகளுக்கு கொரோனாவுக்கான ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
இந்நிலையில் தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. அதன்படி இந்தியா வரும் வெளிநாட்டினர் தாங்கள் வசிக்கும் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும். விமான பயணத்தின்போது அறிகுறிகள் இருப்பின் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
தனிமை சிகிச்சை
மேலும் விமான நிலையத்தில் இருந்து சென்ற பிறகு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் விமான நிலையத்தில் இறங்கியவுடன் காய்ச்சலுக்கான வெப்ப சோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த வேளையில் அறிகுறி இருப்பின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
2 சதவீத பயணிகளுக்கு சோதனை
மேலும் விமானத்தில் உள்ள மொத்த பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு விமான நிலையங்களில் ரேண்டமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த சோதனைக்கு பயணிகள் தங்கள் மாதிரிகளை வழங்கிய பிறகுவிமான நிலையத்தில் இருந்து தாராளமாக வெளியேறலாம். இவ்வாறு பெறப்படும் மாதிரிகளில் கொரோனா கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களின் மாதிரிகள் INSACOG ஆய்வகத்தில் வைரஸின் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விலக்கு
மேலும் அனைத்து பயணிகளும் முன்னெச்சரிக்கையாக தங்களது வருகை பற்றி அருகே உள்ள சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் தேசிய அல்லது மாநில உதவி எண்களை கட்டாயம் அழைக்க வேண்டும். விமான நிலையத்தில் ரேண்டம் பரிசோதனையின்போது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களுக்கு வெப்ப சோதனை உள்ளிட்டவற்றில் அறிகுறி இருப்பினும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள்.