மின்சாரம் தாக்கி நாட்டில் சராசரியாக தினமும் 30 பேர் பலி.. வெளியான புள்ளிவிவர தகவலால் அதிர்ச்சி
டெல்லி: நாட்டில் மின்சாரம் தாக்கி தினந்தோறும் சராசரியாக 30 பேர் பலியாவதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பக புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி வருடந்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்களை தடுக்க போதுமான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை என தெரிகிறது.
கடந்த 2011-ம் ஆண்டில் மின்சாரம் தாக்கி, 8,945 பேர், 2012-ல் 2,750 பேர், 2013ம் ஆண்டில் 10 ,218 பேர், 2014ம் ஆண்டில் 9,606 பேர், 2015ம் ஆண்டில், 9,986 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 1,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் அதிக மின்னழுத்த கம்பிகள் செல்லும் இடங்களுக்கு அருகில் மக்கள் வீடுகள் கட்டி குடிபுகுகின்றனர். அந்த இடங்களில் மின்சாரம் தாக்கிய விபத்தில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.
உயிரிழப்புகளை தவிர்க்க பொதுமக்கள் மின்சார வழித்தடத்திலிருந்து இருந்து பாதுகாப்பான தூரம் தாண்டி குடியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஷாக் அடிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மின்கம்பங்களின் உயரம் 18 அடி இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இவ்விதி முறையாக பின்பற்றப்படுவது இல்லை.
மேலும் மின்கம்பங்களை சரியாக நடாதது, அவற்றை முறையாக பராமரிக்காதது போன்ற காரணங்களால் மின்கம்பங்கள் சாய்ந்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவ்வப்போது பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.
இந்த துர்சம்பவங்களை தவிர்க்க தரைக்கு அடியில் மின்சார கம்பிகளை பதிக்கும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும். ஆனால் இதற்கு அதிகம் செலவு பிடிக்கும் என்பதால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தயக்கம் நிலவுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.