மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் பண்ணலாம்.. லண்டனில் நேரடி செயல்வடிவ நிகழ்ச்சி
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் செயல்வடிவ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பது... பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் வாக்குச்சீட்டு முறையானது கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு ஒழிக்கப்பட்டது. ஏறத்தாழ 15 ஆண்டுகளை கடந்தும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டே நடத்தப்பட்டன. ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிவுகளின் போதும்... தோல்வியுற்ற கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் உண்மைத் தன்மையை கேள்வி எழுப்பின.
பல்வேறு தன்னார்வ அமைப்புகள், பொறியியல் வல்லுநர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பின. அவற்றை பொறியியல் அறிஞர்கள் முன்னிலையில் பரிசோதித்து.. சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தின.
ஆனால்... எந்த குற்றச்சாட்டையும் ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாப்பானது என்றும், அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்றும் மறுப்பு தெரிவித்தன. அது தொடர்பான புகார் மனுக்களையும் ஏற்க மறுத்தன.
இந் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் பண்ணலாம் என்பதை அனைவர் முன்னிலையிலும் செயல்படுத்த லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பையும் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
கணினி துறையில் அனுபவம் வாய்ந்த, இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திர வடிவமைப்பு குழுவில் இருந்தவர்களில் ஒருவருமான அமெரிக்க மென்பொருள் அறிஞரையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஹேக் செய்யலாம் என்பதோடு... ஒவ்வொரு முறையும் தேர்தல் நடத்தப்படும் போதும் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது என்றும் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
ஆனால்... இந்திய தலைமை தேர்தல் ஆணையமோ இது போன்றதொரு ஏற்பாடு, செயல்முறை விளக்கங்கள் நடைபெறுவதை அறியாமல் உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி அசோக் லாவசா கூறுகையில், இதுமாதிரியான செயல்முறை வடிவம் நடக்கப்போகிறது என்பது குறித்து எங்களுக்கு எந்த அழைப்போ, தகவல்களோ இல்லை.
நாங்கள் அன்று முதல் இன்று வரை சொல்லிக்கொண்டு இருப்பது ஒன்றேஒன்று தான். இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடத்த முடியாது, அதனை ஹேக் செய்யவும் முடியாது என்றும் கூறினார்.