பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்த மத்திய அரசு - காரணம் என்ன?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் y பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அப்பதவிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். பாஜகவை எப்படியேனும் தமிழகத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் அண்ணாமலை மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர களப்பணியாற்றி வருகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் திமுக அரசையும்,முதல்வர் ஸ்டாலினையும் பாஜக மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

திமுக அரசு மீது விமர்சனம்
தமிழக முதலமைச்சரை விமர்சித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும்,நோட்டீஸ் அனுப்பிய 24 மணிநேரத்திற்குள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடரப்படும் எனவும் ஆர்எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை தெம்பு திராணி இருந்தால் தக்க ஆதாரத்தை கொடுத்து தன்னை கைது செய்து அழைத்து செல்லட்டும் என்று தெரிவித்திருந்தார்.

ஒய் பிரிவு பாதுகாப்பு ஏன்
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலை நுண்ணறிவு பிரிவினர் ஏற்கனவே அறிக்கையாக தயார் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதாகவும் அந்த அறிக்கை அடிப்படையில் அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒய் பிளஸ் பாதுகாப்பு
ஏற்கனவே அண்ணாமலைக்கு மாநில அரசால் 'ஒய் பிளஸ்' பிரிவு வழங்கப்பட்டு அது கடந்த சில மாதங்களுக்கு முன் அது 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. அது குறித்து அண்ணாமலை தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலைக்கு நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

11 பேர் கொண்ட பாதுகாப்பு
இத்தகைய சூழ்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 'ஒய் பிரிவு' பாதுகாப்பு என்பது இந்தியாவில் 4-வது இடத்தில் இருக்கக்கூடிய பாதுகாப்பு பிரிவாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அண்ணாமலைக்கு 2 பிஎஸ்ஒ உள்பட 11 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு வழங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications