பாலகோட் வான்வழித் தாக்குதலை முன்கூட்டியே.. வாட்ஸ் ஆப்பில் விவாதித்த அர்னாப்.. ஷாக் சம்பவம்!
டெல்லி: பாலகோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது நமது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தப் போவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப்பில் அது தொடர்பாக சர்வசாதாரணமாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பார்க் அமைப்பின் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ்குப்தாவுடன் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப்பில் பேசிய உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதிக்கப்பட்டு வருகின்றன. டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில்தான் இந்த உரையாடல் தொகுப்பும் இடம்பெற்றிருக்கிறது.
புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை சரியான வாய்ப்பு என கொண்டாடிய அர்னாப்
குறிப்பாக பாலகோட் ராணுவ தாக்குதல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னதாக அறிந்து கொண்ட அர்னாப், அது தொடர்பாக பார்த்தோ தாஸ்குப்தாவுடன் பகிர்ந்தும் கொண்டிருக்கிறார்.. அந்த உரையாடல் விவரம்:
அர்னாப்: அடுத்த கட்டமாக நடைபெறக் கூடிய மிகப் பெரிய சம்பவத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
பார்த்தோதாஸ்குப்தா: தாவூத்?
அர்னாப்: இல்லை சார் பாகிஸ்தான்.. இந்த முறை பெரிய அளவில் ஒன்று நிகழப் போகிறது
பார்த்தோ: நல்லது
பார்த்தோ: இந்த சீசனில் இது மிகப் பெரிய நிகழ்வு
பார்த்தோ: தாக்குதல் அல்லது அதைவிட பெரியதா?
அர்னாப்: வழக்கமான தாக்குதலைவிட மிகப் பெரியது. காஷ்மீரில் மிகப் பெரிய ஒன்று. மக்களை உற்சாகப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு பார்த்தோதாஸ் குப்தாவுடன் அர்னாப் கோஸ்வாமி, பாலகோட் தாக்குதல் நடப்பதற்கு முன்னதாகவே உரையாடி இருக்கிறார்.