ஆம்ஆத்மியை பார்த்து பயப்படும் பாஜக! குஜராத்தில் முன்கூட்டியே தேர்தலா? பரபரப்பை பற்ற வைத்த கெஜ்ரிவால்
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியை பார்த்து பாஜக பயப்படுவதாகவும், குஜராத் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை சந்திக்க அந்த கட்சி திட்டமிட்டு வருவதாகவும் தமது டுவிட்டர் பதிவில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 உறுப்பினர்களைக் கொண்ட
சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க அவர்களது சொந்த மாநிலத்தில் குஜராத்தில் தனது கவனத்தை ஆம் ஆத்மி கட்சி திருப்பியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி
இந்த ஆண்டு இறுதியில் அங்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன், அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில நாட்களுக்கு அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று, திரங்க யாத்ரா என்ற ஆம் ஆத்மி கட்சியின் பேரணியில் பங்கேற்றார். அப்போது பேசிய கெஜ்ரிவால், குஜராத்தில் 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. குஜராத்தை வெல்ல வந்தேன். குஜராத்தையும், குஜராத்திகளையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். குஜராத்தில் ஊழல் முடிவுக்கு வர வேண்டும் " என்றார்.

ஆம் ஆத்மி கட்சி
இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சி குஜராத் சட்டமன்றத் தேர்தலில் சுமார் 58 இடங்களை வெல்லும் என்று அவர்கள் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு கிராமப்புற வாக்காளர்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கீழ் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தகுந்த வெற்றி
"எங்கள் கணக்கெடுப்பின்படி நாங்கள் 58 இடங்களை வெல்வோம். குஜராத்தின் கிராமப்புற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கின்றனர். நகர்ப்புறங்களில் உள்ள கீழ் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மாற்றத்தை விரும்பி எங்களுக்காக வாக்களிப்பார்கள்" என்று ராஜ்யசபா ஆம் ஆத்மி எம்.பி டாக்டர் சந்தீப் பதக் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை பார்த்து பாஜக பயப்படுவதாகவும், குஜராத் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை சந்திக்க அந்த கட்சி திட்டமிட்டு வருவதாகவும் தமது டுவிட்டர் பதிவில் கெஜ்ரிவால் கூறியுள்ளார். "குஜராத் சட்டசபையை கலைத்துவிட்டு குஜராத் தேர்தலை அடுத்த வாரம் பாஜக அறிவிக்கப் போகிறதா? ஆம் ஆத்மியை பார்த்து இவ்வளவு பயமா? " என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications